முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம் - நீட், மதுரை எய்ம்ஸ் குறித்து விவாதிக்கிறார்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம் - நீட், மதுரை எய்ம்ஸ் குறித்து விவாதிக்கிறார்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்ரமணியத்துடன் தமிழகத்தின் முக்கிய அதிகாரிகளும் டெல்லி செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மத்திய சுகாதார அமைச்சரை சந்திப்பதற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லி செல்கிறார். பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் சந்திப்பின்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள், நீட் தேர்விற்கு விலக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.

மேலும், தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசி வழங்குவது, மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, நீட் தேர்வுக்கு விலக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் மா.சுப்ரமணியத்துடன் தமிழகத்தின் முக்கிய அதிகாரிகளும் டெல்லி செல்கின்றனர்.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நாள் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூறினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசியபோது இதனை தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் சாதனைகளை சுட்டிக்காட்டி பேசும் போது மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்றுத்தந்தது அதிமுக தான் எனவும் பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனுமதியை பெற்றதோடு ஒரு போர்டு கூட வைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழ்நாடு மட்டுமல்லாது பல மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு வழங்கியதாகவும், அதில் பல மாநிலங்களில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, சில மாநிலங்களில் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் கூறிய அமைச்சர், அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த ஒரு வேலையுமே நடக்கவில்லை எனவும் கூறினார்.

Must Read : சிறப்பு வழிகாட்டி குழு... கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மேலும், திமுக ஆட்சியமைத்த பிறகு பிரதமரை நேரிலும், கடிதம் மூலமாகவும் வலியுறுத்திய காரணத்தினால், கடந்த மாதம் 3 ஆம் தேதி குழு அமைக்கப்பட்டு மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஆய்வு நடைபெற்றிருப்பதாகவும அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்நிலையில், அவர் டெல்லியில் மத்திய அமைச்சரை இன்று சந்தித்துப் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Aiims Madurai, Ma subramanian, Neet Exam