திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலைப்பட்டியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பொதுக்கூட்டதில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒவ்வொரு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் பணியில் அனைத்து அமைச்சர்களும் பணியாற்றி வருகிறார்கள். தமிழ் இனத்தை பாதுகாக்க குரல் கொடுக்கும் தலைவரை நாம் பெற்றுள்ளோம்.
இந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் எனக்கு இரண்டு திட்டங்கள் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்கிற அறிவிப்பு, மற்றொன்று 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்ததும் தான். எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் நம் பக்கம் தான் என்பதை தொடர்ந்து நிருபிப்போம் என்றார்.
அரசியலில் யார் தான் புனிதர் இருக்கிறார்கள்
அடுத்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ஓர் ஆண்டில் நேரு 100 கோடி ரூபாய் சம்பாதித்ததாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். நான் அவ்வாறு சம்பாதிக்கவில்லை, அப்படி சம்பாதித்தால் அது மக்களுக்காக தான் செலவழிக்கப்படும். கே.என்.நேரு புனிதரா என கேட்கிறார்கள். அரசியலில் யார் தான் புனிதர் இருக்கிறார்கள். என்னை நீதிமன்றத்தில் சந்திக்கிறோம் என்கிறார்கள். ஏற்கனவே என் மீது 19 வழக்குகள் பதியப்பட்டன. அதிலிருந்து வெளியே வந்துள்ளோம்.
சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி என்கிற நிலைக்கு மாவட்டத்தை உயர்த்துவோம்
திமுக அரசு பொறுப்பேற்றபோது 5 லட்சம் கோடி ரூபாய் கடனாக இருந்தது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான்கு மாதங்கள் கொரோனா, அதன் பின்பு வெள்ளம், அதன் பின்பு சட்டமன்ற கூட்டத்தொடர் இருந்தது மீதமிருந்த சில மாதங்களில் தான் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் 850 கோடியில் புதிய பேருந்து முனையம், மார்கெட்120 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டம், தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இது போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகிறோம். திருச்சி மாவட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி பெறும். சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி என்கிற நிலைக்கு மாவட்டத்தை உயர்த்துவோம். நாங்கள் நிச்சயம் நேர்மையாக தான் பணியாற்றுவோம், எந்த தவறும் செய்ய மாட்டோம் என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
அடுத்து சிறப்புரையாற்றிய டி.ஆர்.பாலு, திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு கொரோனா நிவாரணம், கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம், பெட்ரோல் விலை ரூ.3 குறைவு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 12,21,000 பேருக்கு நகைக்கடன் ரத்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை ஒதுக்கீடு இப்படி பல்வேறு திட்டங்கள் ஓர் ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மாநில சுயாட்சியும் சமூக நீதியும்
திராவிட மாடல் என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். திராவிட மாடல் என்பது பலருக்கு புரியவில்லை. அண்ணா, கலைஞர் இருவரும் திராவிட மாடல் ஆட்சி தான் நடத்தினார்கள். கடமை, கண்ணியம், கட்டுபாடு என அண்ணா சுருக்கமாக கூறினார். கலைஞர் ஐம்பெரும் முழக்கங்களை முன் வைத்து ஆட்சி நடத்தினார். அவர்கள் கூறியதன் அடிப்படையிலும் மாநில சுயாட்சியை முன்னிருத்தி தற்போது ஆட்சி நடைபெறுகிறது.
மாநில சுய ஆட்சி இல்லையென்றால் சமூக நீதி வருவதற்கு வாய்ப்பில்லை. மாநில சுய ஆட்சியும் சமூக நீதியும் இணைத்து செயல்படும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. மாநில சுயாட்சி என்பது அடிப்படை தேவை. மாநில சுயாட்சிக்காக கலைஞர் ராஜமன்னார் குழுவை அமைத்தார். அந்த குழுவின் பரிந்துரை வந்த பின்பு நாடே அது குறித்து பேசியது. மத்திய அரசில் அதிகார குவியல் இருந்தது அதனை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என ஜோதிபாசு, பரூக் அப்துல்லா உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள்.
சர்க்காரியா கமிஷன், வெங்கடாச்சலய்யா கமிஷன் உள்ளிட்ட குழுக்கள், மத்திய அரசு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியது. ஆனால் காங்கிரஸ் அரசும் அதை செய்யவில்லை, பாஜக அரசும் செய்யவில்லை. கிட்டத்தட்ட 51 ஆண்டுகளாகியும் மாநில சுயாட்சி குறித்து இன்றும் பேசப்படுகிறது.
பிடரியை பிடித்து உலுக்கும் தைரியம் பெற்றவர்
திமுக அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினரும் விரும்புகிறார்கள். திமுக தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி குறித்து நாடு முழுவதும் எடுத்து செல்ல வேண்டும்.
சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை அனைத்து முதலமைச்சர்களுக்கும் பெற்று தந்தது கலைஞர் தான். அவரின் மகன் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் பிடரியை பிடித்து உலுக்கும் தைரியம் பெற்றவர்.
திமுக எங்களுடன் இருந்தால் என்ன என பாஜகவினர் கேட்கிறார்கள். அவர்களிடம் நான், உங்களிடம் சேர்ந்தால் நாங்கள் தேறாமல் போய் விடுவோம் என கூறினேன். திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் பாஜகவினர் மிகுந்த வெறுப்புடன் இருக்கிறார்கள்.
இரண்டு தண்டவாளங்கள்
மாநில சுயாட்சி ஒரு தண்டவாளம், சமூக நீதி ஒரு தண்டவாளம் இரண்டும் இருந்தால் தான் திராவிட மாடலை முழுமையாக பெற முடியும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை கேஸ் விலையை உயர்த்தி கொண்டு செல்கிறார்கள், அதில் பல லட்சம் கொள்ளை அடித்துள்ளார்கள். பல்வேறு வரிகளை உயர்த்தி வருகிறார்கள். இவையெல்லாம் தாண்டி திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.
திமுக அரசு ஓர் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற ஸ்டாலின் கரத்தை அனைவரும் வலுப்படுத்த வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் திமுக திருச்சி மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் - இ.கதிரவன், திருச்சி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.