மயிலாடுதுறை அருகே முகக்கவசம் அணியாமல் சாலையில் சுற்றித் திரிந்தவர்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பேரூராட்சிஊழியர் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு பேரூராட்சியில் மொத்தம் 40 பேருக்கு
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மணல்மேடு பேரூராட்சி சார்பில் தினந்தோறும் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு திங்கள்கிழமைமுதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதையடுத்து இன்று இரவு 9 மணி வரை கடைகள்
செயல்படும் என அரசு அறிவித்தது. இதனால், மணல்மேடு பேரூராட்சியில் கடைகள் திறக்கப்பட்டு, அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் முண்டியடித்தனர்.
மேலும் படிக்க.. டயானா மரணத்துக்கு பிபிசி காரணம்? முற்றும் நெருக்கடி..
அப்போது சிலர் முகக்கவசம் அணியாமல் வந்திருந்தனர். முகக்கவசம் அணியாமல் கடைவீதிக்கு வந்தவர்களை மணல்மேடு பேரூராட்சி பொது சுகாதார மேற்பார்வையாளர் சாமிநாதன் என்பவர் தடுத்து நிறுத்தி, ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு முககக்வசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். பின்னர், முகக்கவசம் அணியாமல் வந்தவர்களின் கால்களில் விழுந்து, கைகூப்பி வணங்கி முகக்கவசத்தை வழங்கி அணிந்து கொள்ள செய்தார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.