சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை கடந்த சில தினங்களுக்கு முன்பு எட்டியது. அதனை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் அப்படியே கல்லணை முக்கொம்பு வழியாக கீழ் அணைக்கு கடந்த சில தினங்களாக திறந்து விடப்பட்டு வருகிறது. அதேபோல அமராவதி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீர் அப்படியே கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு உபரி நீர்களும் கொள்ளிடம் ஆற்றில் வருவதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது அந்த காட்சிகளை தற்போது நாம் கழுகுப் பார்வையில் பார்த்து வருகிறோம். கடந்த சில தினங்களாக கீழணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் தற்போது சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் சென்று பழையார் கடலில் கலந்துவருகிறது. தொடர்ந்து ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து கொண்டே வருவதால் ஆற்றின் இரு கரையோரங்களிலும் மட்டுமே சென்ற தண்ணீர் தற்பொழுது பரவலாக சென்று கொண்டுள்ளது.
Also Read: பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய பெண் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
தற்போது நிலவரப்படி ஆற்றில் 1.5லட்சம் கன அடி தண்ணீர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் மயிலாடுதுறை மாவட்டம் நாதல்படுகை, வெள்ளைமணல் உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதிகளிலும் அதேபோல கடலூர் மாவட்டம் கீழகொண்டலபாடி அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம் நடுத்திட்டு உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து வருகிறது.
கொள்ளிடம் ஆற்றின் இரண்டு கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீர்காழி ஆர்டிஓ நாராயணன் தலைமையில்,சீர்காழி தாசில்தார் சண்முகம், சீர்காழி டிஎஸ்பி லாமேக், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசார் டிராக்டர் மூலம் கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி உள்ள அளக்குடி மற்றும் வெள்ளமணல் ஆகிய கிராமங்களுக்குச்சென்று அங்கு உள்ளவர்களை சிறப்பு முகாமில் தங்குவதற்கு அழைப்பு விடுத்து வந்துள்ளனர்.
Also Read: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கிறது... நாள் வாரியாக விபரம்..
வெள்ளமணல் மற்றும் அளக்குடி கிராமங்களில் உள்ளவர்களை அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் அழைத்து வந்து தங்க வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதேபோல கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் பயிர்கள் மற்றும் பணப்பயிர்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றின் திறக்கப்படும் நீரின் அளவு கடந்த 2 தினங்களாக குறைந்திருந்த நிலையில் தற்போது அதிகரித்தால் இந்த பகுதிகளில் பாதிப்பு அதிகம் ஏற்பட கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள் தற்போது கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பால் மீண்டும் பாதிப்படைந்து வருகின்றனர். தற்பொழுது கொள்ளிடம் ஆற்றில் சென்று கொண்டிருக்கும் ஒரு லட்சம் கன அடி உபரிநீர் வீணாக கடலில் சென்று கலப்பதாகவும் இதே போல ஒவ்வொரு ஆண்டும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் வீணாக கடலில் சென்று கலப்பதாகவும் அதனை சேமித்து விவசாய பணிகள் மேற்கொள்ள கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள கதவனை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இப்பகுதி விவசாயிகள் விடுத்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.