அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக பிரச்னை தொடர்வதால் மயிலாடுதுறை பட்டவர்த்தி கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை தாலுகா பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட முன்னாள் செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்த போது மோதல் ஏற்பட்டு, இரண்டு சமூகத்தினர்கள் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதி (நாளை) அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி அவரது உருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்-க்கு அனுமதி கேட்டிருந்தனர்.
இதேநாளில் தலைஞாயிறு கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி உத்ஸவம் நடத்த அப்பகுதியில் வசிக்கும் வேறு சமுதாய மக்கள் அனுமதி கேட்டிருந்தனர்.
Also read... சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 2 ஆண்டுகள் கழித்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மீண்டும் தொடக்கம்
இந்நிகழ்வுகளால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கும் பொருட்டு குற்ற விசாரணை முறைச்சட்டம் 144(3)-இன்படி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியருக்கு மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், அப்பகுதியில் பொது அமைதி, சமூக நல்லிணக்கத்தை காக்கும் விதமாக 13.04.2022 காலை 6 மணி முதல் 17.04.2022 நள்ளிரவு 12 மணி வரை தலைஞாயிறு மதகடி பகுதியிலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 2 நபர்களுக்கு மேல் கூடிநின்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த விதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144(3)-இன்கீழ் உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி ஆணை பிறப்பித்தார்.
இதையடுத்து, இன்று காலைமுதல் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு குறித்து தகவல் அறியாத கிராம மக்கள் வழக்கம்போல் அப்பகுதியில் நடமாடி வருகின்றனர். நாளை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அப்பகுதியில் மேலும் அதிக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
செய்தியாளர்: கிருஷ்ணகுமார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mayiladuthurai