எமர்ஜென்சி சேவைகளை உண்மையாகவே அவசர நிலையில் இருப்பவர்கள் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நம்மில் பலருக்குத் தெரியும். எமெர்ஜென்சி சர்வீஸ்களில் மிகவும் முக்கியமான ஒன்று ஆம்புலன்ஸ் சர்வீஸ். இந்த சேவையை காரணமின்றி தேவையில்லாமல் யாரும் தொந்தரவு செய்ய கூடாது. உண்மையான மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் மட்டுமே ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு உயிரின் மதிப்பு எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால் தைவானியர் ஒருவர் 'எமெர்ஜென்சி' என்பதற்கு வேறு வரையறையை கொண்டிருந்துள்ளது உலகளவில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தைவான் நாட்டில் மெடிக்கல் எமெர்ஜென்சிக்கு ஆம்புலன்ஸ் சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஒரு வருடத்திற்கு சுமார் 39 முறை ஆம்புலன்ஸ் சேவையை அழைத்து இருக்கிறார் குறிப்பிட்ட தைவானியர். இவரை தற்போது கடுமையாக எச்சரித்து இருக்கிறது 39 முறை ஆம்புலன்ஸ் சேவையை வழங்கிய மருத்துவமனை. அவருக்கு என்ன பிரச்சனையோ அதனால் தான் இத்தனை முறை ஆம்புலன்ஸை அழைத்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
ஏனென்றால் இவர் ஆம்புலன்ஸை அழைத்த ஒருமுறை கூட உடல்நல பாதிப்பிற்காகவோ அல்லது மெடிக்கல் எமெர்ஜென்சிக்காகவோ ஆம்புலன்ஸை பயன்படுத்தவில்லை. மாறாக உண்மையில் அந்த நபர் ஆம்புலன்ஸை 39 முறை இலவச டாக்ஸியாக பயன்படுத்தவே அழைத்துள்ளார் என்பது தான் உச்சகட்ட அதிர்ச்சி. இதனை சமீபத்தில் கண்டறிந்த மருத்துவமனை நிர்வாகம் அவரை கடுமையாக எச்சரித்து உள்ளது. ஆம், தைவானில் அவசரநிலைக்கு ஆம்புலன்ஸ் சேவைகள் இலவசம் என்பதை பயன்படுத்தி இஷ்டத்துக்கு ஆம்புலன்ஸ் சர்வீஸை பயன்படுத்தி இருக்கிறார் குறிப்பிட்ட நபர். இதற்கே கடுப்பானீர்கள் என்றால் அவர் ஆம்புலன்ஸை எதற்காக பயன்படுத்தினார் என்று தெரிந்தால் இன்னும் உஷ்ணமாவீர்கள்.
ALSO READ | ட்விட்டரில் ட்ரெண்டாகும் வலிமை ஹேஷ்டேக் ... கொண்டாடும் அஜித் ரசிகர்கள்
மருத்துவமனை ஒன்றின் அருகில் தான் குறிப்பிட்ட நபரின் வீடு இருக்கிறது. வீட்டிலிருந்து தனது ஏரியாவில் இருக்கும் சூப்பர் மார்கெட்டிற்கு சென்று பர்ச்சேஸை முடித்த பின்னர் மீண்டும் நடந்து வீடு திரும்ப அவருக்கு அலுப்பு ஏற்பட்டு விடும் போல. உடனே தனது வீட்டின் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கால் செய்து ஏதாவதொரு காரணத்தை சொல்லி ஆம்புலன்ஸை வரவழைத்து விடுவார். இதனை தொடர்ந்து இவர் இருக்கும் இடத்திற்கு செல்லும் ஆம்புலன்ஸ், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும். அருகில் தான் வீடு என்பதால் மருத்துவமனைக்குள் செல்வது போல போக்கு காட்டி விட்டு மருத்துவரையும் பார்க்காமல், டெஸ்ட் எதுவும் எடுக்காமல் அப்படியே வீட்டுக்கு சென்றுள்ளார்.
கடைசி சில முறை இவர் இப்படி செய்ததை கவனித்த மருத்துவமனை ஊழியர்கள், இந்த விஷயத்தை காவல்துறையினரிடம் எடுத்துச் சென்றனர். பின்னர் விசாரணையில் அந்த நபரின் பெயர் வாங் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை நேரில் விசாரித்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இது போன்ற நடவடிக்கையில் இனி ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.
ALSO READ | ஒமைக்ரான் அச்சுறுத்தல்: டிசம்பர் 15ல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய இந்தியா!
இதில் மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால் அவரது வீட்டிற்கும், சூப்பர் மார்கெட்டிற்கும் இடையே உள்ள தூரம் வெறும் 200 மீட்டர் தான் அதாவது 0.2 கிமீ.! 39 முறையும் "இந்த பெரிய தூரத்தை" நடக்க முடியாமல் தான் வீட்டிற்கு அருகில் இருக்கும் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் சர்வீசை இலவச டாக்சியாக பயன்படுத்தி வந்துள்ளார் வாங்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.