முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருவதால் சாலையை சீர்செய்க: மதுரை மாநகராட்சி உத்தரவு குறித்து எம்.பி வெங்கடேசன் கேள்வி

ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருவதால் சாலையை சீர்செய்க: மதுரை மாநகராட்சி உத்தரவு குறித்து எம்.பி வெங்கடேசன் கேள்வி

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வருவதால் சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி மேயர் உத்தரவிட்ட விவகாரம் குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பா.ஜ.கவின் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசியத் தலைவராக மோகன் பகவத் உள்ளார். மதுரையில் நடைபெறும் நான்கு நாட்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் தமிழ்நாடு வருகை தரவுள்ளார். இந்தநிலையில், மதுரையில் மோகன் பகவத் செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில், ‘மதுரை மாநகராட்சி மண்டலம் சத்யசார் நகரில் அமைதுள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத் 22-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை நேரில் கலந்துகொள்ள உள்ளார். எனவே, அவருடைய வருகையை முன்னிட்டு விமானநிலையத்தில் இருந்து அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளில் சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திடவேண்டும்.

அவர் பயணிக்கு நேரங்களில் சாலைகளில் மாநகராட்சிப் பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை கண்காணித்தல் போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி ஆணையர் பெயரில் வெளியாகியுள்ள இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டர் பதிவில், ‘அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் தி.மு.க கடுமையாக எதிர்த்துவருகிறது. ஆர்.எஸ்.எஸின் கொள்கை நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று வலியுறுத்திவருகிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாதபோதும் ஆர்.எஸ்.எஸ் கொள்கையுடன் தொடர்புடைய சில அம்சங்களை தமிழக அரசு அதிகாரிகள் உத்தரவாக பிறப்பித்து சர்ச்சை எழுவது வழக்கமாக இருந்துவருகிறது.

ஆன்லைன் கல்விக்கென்று உருவாக்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சியில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, கோவை வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் காவி உடை அணிந்த இரண்டு அடி திருவள்ளுவர் படம் மாட்டப்பட்டது. பின்னர், சர்ச்சையான நிலையில், அந்தப்படம் நீக்கப்பட்டு வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படம் அங்கு மாட்டப்பட்டது. இதற்கிடையில் திருப்பூர் மாவட்ட வட்டாசியர் சுப்ரமணி, இறைச்சிக் கடைக்கு சென்று மாட்டிறைச்சி வெட்டக் கூடாது என்று உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்தநிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் உள்ளிட்டவர்கள் ஒரு பகுதி வருகை தரும்போது அந்தப் பகுதியில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட புணரமைப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கமான ஒன்று. ஆனால், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இல்லாத ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகைக்காக சாலைகள் உள்ளிட்ட புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளவேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Madurai, Su venkatesan