தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை மதம் மாறுவதற்கு கட்டாயப்படுத்தினார்கள் என்று பா.ஜ.க தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுவருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்யவேண்டும் என்று அரியலூரைச் சேர்ந்த மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மாணவி, தன் தாயிடம் மதமாற கட்டாயப்படுத்தினர் என கூறி உள்ளார். ஆனால் மாணவி தரப்பு குற்றச் சாட்டுகளை தற்போதைய விசாரணை அமைப்பு கருத்தில் கொள்ளவில்லை . மாணவியின் கல்வி கனவு பறிபோகி விட்டது. உரிய நியாயம் கிடைக்க வேண்டும். எனவே, சி.பி.ஐ அல்லது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சைபர் க்ரைம் தொடர்பான விசாரணை முக்கியம்.
எனவே இதனை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள சைபர் விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை. என மனு தாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அதனையடுத்து ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், ‘உயிரிழந்த மாணவியிடம் வீடியோ வாக்கு மூலம் எடுத்த முத்து வேல், விசாரணை அதிகாரியின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. மாணவியின் வாக்கு மூலத்தை போலீசார் பதிவு செய்து உள்ளனர். .விசாரணை நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு தரப்பு விசாரணைக்கு இடையூறு செய்கின்றனர்’ என்று வாதிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் வாதத்தின்போது, ’மாணவியின், கைப்பட எழுதிய மரண வாக்கு மூல கடிதம், ஒரு ஊடகத்தில் வெளியானது. ஆனால் விசாரணை முடியும் வரை பொது வெளியில் வெளியிடக்கூடாது என விதிமுறை உள்ளது. ஆனால், எவ்வாறு வெளியானது. இது விசாரணையில் உள்ள தொய்வை காட்டுகிறது.
தொடர்ந்து வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், ‘மாணவி இறந்த பிறகு வீடியோ வெளியிட்டது ஏன்? தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்புகின்றனர். 63 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீடியோ ஆய்வு முடிவு வரவில்லை. வந்தவுடன் உரிய தெளிவு கிடைக்கும். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பேட்டி விசாரணையை பாதிக்கும் வகையில் இல்லை. விசாரணை நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டாம் என வாதிட்டார்.
பள்ளி தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, ‘மாணவியின் சித்தியின் மீது தான் குறை உள்ளது. எங்கள் நிறுவனங்களை சேவை நோக்கில் நடத்தி வருகின்றொம். எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கூடாது. கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்ய வேண்டிய நிலை இல்லை. மனுதாரர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மதமாற்றம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டி உள்ளார். ஏன் அப்போது புகார் கூறவில்லை. கொரோனா ஊரடங்கு விடுமுறைக்கு சென்ற மாணவி மீண்டும் பள்ளி தொடங்கியவுடன் வரவில்லை, நிர்வாகம் தான் போன் செய்து வரவழைத்தனர். இந்த நிறுவனத்தில், இதுவரை இது போன்ற புகார் வரவில்லை. மதமாற்றம் என்ற குற்றசாட்டில் உண்மை இல்லை என்று பள்ளிகல்வி துறை ஆய்வில் தெளிவுபடுத்தி உள்ளனர்.
கல்வி வழங்கியதற்காக, 68 வயது அருட் சகோதரி தற்போது சிறையில் உள்ளார். உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும். 2020 ல் மாணவி சைலட் லைனில் புகார் கொடுத்து உள்ளார். மாணவி ஒரு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அருட் சகோதரிகள் தான் மருத்துவ ம் பார்த்தனர். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. மதமாற்றம் நடைபெறவில்லை. மாணவியின் சித்தியின் பாகுபாடால், மாணவி பாதிக்கப்பட்டு உள்ளார். நாங்கள் தூய்மையாக உள்ளோம். விசாரணையை எதிர் கொள்ள தயார் இவ்வாறு வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்புக்காக ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ariyalur