தமிழகத்தில் 7 கோடி பேரிடம் பேசினாலும் இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் அதிமுக தொண்டன் இருப்பான் எனவும் இரட்டை இலைக்காக பாடுபட்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என சசிகலா செல்போன் உரையாடல் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவில் வளாகத்தில் இன்று மதுரை மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகளுக்கு கட்சிப்பணி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமை ஏற்று கட்சி நிர்வாகிகளிடம் பேசினார்.
அப்போது, இன்றைக்கு பல்வேறு வகையில் நாம் சோர்வுற்ற காரணத்தினால் நம்மில் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக நம்மிடம் இருந்து பிரிந்தவர்கள் சுமத்திய பழியின் காரணமாக நம்மிடமிருந்து பிரிந்து இரட்டை இலை சின்னத்தால் அடையாளமும் அதிகாரமும் பெற்று இன்றைக்கு இரட்டை இலையை முடக்குவோம் என்கின்றனர். மேலும் அதை எதிர்த்து போட்டியிட்டு வெற்றியை பறித்தவர்கள் தான் இன்றைக்கு நமது ஆட்சி பறிபோக காரணமாக இருக்கிறார்கள் என்பதை எல்லோரும் அறிந்த ஒன்றாக இருக்கிறது. இதை யாரும் மறந்து விட முடியாது. அதை தொண்டர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் .
மக்கள் வெற்றியை தருவதற்கு தயாராக இருந்த நேரத்தில் கூட இரட்டை இலையால் பதவி பெற்றவர்கள் வாழ்வு, வசதி பெற்றவர்கள் இரட்டை இலையை தோற்கடிக்க வேண்டும் என்று களத்தில் நின்ற காரணத்தினால் தான் இரட்டை இலை சின்னம் ஆட்சியைப் பறிகொடுத்தது. இந்த பாவத்தை செய்தவர்கள் அதற்கு உரிய பரிகாரத்தை தேடி தான் ஆக வேண்டும்.
இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதற்கு ஓரணியில் திரண்டு அனைவரும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். 7கோடி பேரில் எங்கோ ஒரு மூலையில் இருப்பவரிடம் பேசிக்கொண்டு அதைவைத்து குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையோடு பணியாற்றி அதிமுக மீண்டும் ஆட்சி அரியணையில் ஏற்ற வேண்டும்.
Also Read : செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் நிலை என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்து மாணவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த விவகாரத்தில் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசாமல் மௌனவிரதம் இருக்கிறார்களா? நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டியதுதானே? நீட்தேர்வு என்னாச்சு என்று என பேசிய ஆர் பி உதயகுமார் காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என 22 நாட்கள் முடக்கியது யாருக்காக நாட்டு மக்களுக்கா? என்றும் கேள்வி எழுப்பினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: RB Udayakumar