மதுரையில் சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரைப் பெருவிழாவின் உச்ச நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் விழா ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று அதிகாலை நடைபெற்றது. ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இன்று காலை அழகர் இறங்கினர்.
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழ்ந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரையில் இன்று காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கோவிட் பாதிப்பால் 2 ஆண்டுகளுக்கு பின் இந்த வைபவம் நடப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில் இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்று திரும்பும் வேளையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் வாகன விபத்து ஏற்படுத்தியவரை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது
மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும் 7 பேர் சாதாரண காயங்களுடனும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டதோடு இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமும் , படுகாயமடைந்தர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க ஆணையிட்டுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.