திண்டுக்கல் அருகே மதுரை நோக்கி சென்ற பேருந்தில் குடிபோதையில் ஏறிய பெண் தகாத வார்த்தைகளால் பேசி அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி 50 பயணிகளுடன் கோவை போக்குவரத்து கழக பேருந்து வந்து கொண்டிருந்தது. அதில் கரூரைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணும் அவர் தோட்டத்தில் வேலை பார்க்கும் வெள்ளை வேட்டி சட்டை அணிந்த மற்றொரு நபரும் வந்து கொண்டிருந்தனர் அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கரூர் பேருந்து நிலையத்தில் இருந்தே அவர்கள் கெட்ட வார்த்தைகளால் பேசியபடி பயணித்துள்ளனர். பேருந்தில் ஏறிய பெண் தன் உடன் வந்தவரை தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டே வந்துள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பெண் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.
பேருந்தில் இருந்த மற்ற ஆண் பயணிகள் அந்த பெண்ணை அமைதியாக வரும்படி எச்சரித்தனர். சற்றும் சளைக்காத அந்த பெண் குடிபோதையில், ஆண் பயணிகளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுடன் கால்களைத் தூக்கிக் கொண்டு அடிக்க பாய்ந்தார்.
பெண் என்பதால் அவரை ஒன்றும் செய்ய முடியாமல் பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் செய்வதறியாது திகைத்தனர். பேருந்து செல்லச்செல்ல குடிபோதை பெண்ணின் அட்டகாசம் அதிகரித்தது.
இதனால் வேறுவழியின்றி வேடசந்தூர் வந்த பேருந்தை காவல் நிலையத்திற்கு செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தினர். காவல்நிலையத்திற்கு ஓட்டுநர் பேருந்தை ஓட்டிச் செல்ல, அங்கு பேருந்திலிருந்த பெண்ணை போலீசாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர்.
காவல் நிலையத்திற்குள் சென்றதும் அந்த பெண் தன்னை அவமரியாதையாக பேசியதாக தன் மீது புகார் அளித்த நபர் ஒருவர் மீது பழிசுமத்தினார். மேலும் போலீசார் முன்னிலையிலேயே தகாத வார்த்தைகளால் பேசி கலாட்டா செய்ததால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
ஆவேசமாக புகார் அளித்த பயணிகளை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரைக் கண்டித்ததுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Madurai