மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதையடுத்து இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வருகிற ஜூலை 1ஆம் தேதி மூவரும் ஆஜராக வேண்டும் என்றும் இல்லையென்றால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று பேர் சார்பிலும் வழக்கை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் சார்பில் ஜனநாயக ரீதியிலான போராட்டம் தான் என்றும் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து மூவர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.