தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய நிபுணர் குழுவினர் இரண்டாவது நாளாக இன்று ஆய்வு மேற்கொள்கின்றன. இந்நிலையில், சமூகப் பரவலாக ஒமைக்ரான் மாறிவருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் பரவல் அதிகமுள்ள 10 மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்பிவைத்தது. இதன்படி, தமிழகத்துக்கு டாக்டர் வனிதா, பூர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ் பாபு ஆகியோர் வருகைதந்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் அவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மாவட்ட வாரியாக சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தேனாம்பேட்டையில் உள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடம், கட்டளை மையம், தடுப்பூசி சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை நிபுணர்கள் பார்வையிட்டனர். பின்னர், கூடுவாஞ்சேரி சென்ற குழுவினர், தடுப்பூசி மையம், கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வுசெய்தனர். சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைக்கான ஏற்பாடுகள், கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை வசதிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். மத்திய குழுவினர் இன்னும் இரண்டு நாட்கள் ஆய்வுசெய்வார்கள் என்று மருத்துவத் துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே, தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனம், ஊட்டியில் உள்ள பாஸ்டர் நிறுவனம் ஆகியவற்றில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறினார்.
Read More : தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது; தற்கொலைகள் அதிகரித்து விட்டன: அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் 97 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான மரபணு மாற்றம் கண்டறியப்பட்டிருப்பதாகவும், ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலை இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். ஒமைக்ரான் தொற்றை உறுதிசெய்ய தமிழகத்தில் உள்ள மரபியல் ஆய்வுக்கூடத்தை பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய குழுவினரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Must Read : நடிகர் வடிவேலு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் இருந்து ஒமைக்ரான் ஏற்படுவது என்ற நிலைமாறி, சமூக பரவல் என்ற நிலையை எட்டியிருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். முன்னதாக, சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில், 18 பேர் குணமடைந்திருப்பதாகவும், 16 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ma subramanian, Omicron