கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது எனவும், தள்ளிவைக்க கோரியும் தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தொடர்ந்த வழக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் ஆஜராகி, தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என்றும், 17 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஐ.சி.யூ. அனுமதியும் அதிகரிக்கிறது என்றும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், ஜனவரி 27க்குள் அறிவிப்பாணை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில், மாநிலத்தில் உள்ள நிலையை பொறுத்து தேர்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் 2021ல் அனுமதி அளித்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் 4 மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதாக உத்தரவாதம் அளித்திருப்பதாகவும், அந்த அவகாசம் ஜனவரி 27ஆம் தேதியுடம் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலை கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் நடத்துவது தொடர்பாக டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் நகர்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அன்றைய தினம் இந்த வழக்கு மட்டும் நேரடி விசாரணை முறையில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.