தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி என்ற ஊரில் உள்ள கிறித்தவப் பள்ளியில் படித்த அரியலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக தமிழக
பாஜக சார்பில்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ சுந்தர், வி.பி துரைசாமி, கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் குஷ்பு, ‘எல்லோர் வீட்டிலும் பெண் குழந்தை உள்ளது. இழந்தவர்களுக்கு மட்டும் தான் வலி தெரியும். திமுகவிற்கு இழந்தவர்களின் வலி தெரியாது. அவர்கள் அரசியல் மட்டும் தான் செய்வார்கள். இதுவரை முதல்வர் வாய் திறக்காதது ஏன்? மதம் மாற்றம் குறித்து இறந்த குழந்தையே வீடியோ வாக்குமூலம் கொடுத்தும் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுதான் ஸ்டாலின் கொடுக்கும் விடியலா? எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கும் திருமாவளவன் எங்கே போனார். அவர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை.
மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு திமுக பதில் அளிக்க முடியாது. மதமாற்றம் இல்லை என்றால் குழந்தை பேசியது பொய்யா? உலகில் மிகசிறந்த தலைவர் மோடி என ஆயுவுகள் கூறுகிறது. உலகளவில் இந்தியா முன்னேறியுள்ளது. நான் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவள். நான் இந்துவை திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்கிறேன். என்னை யாரும் மதம் மாற்றவில்லை. நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.
காங்கிரஸ் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு எதிர்கட்சி கிடையாது. சொல்லப்போனால் எங்களுக்கு எதிர்க்கட்சி இல்லை. அண்ணாமலையின் துணிச்சல், தைரியம் தெரியவேண்டுமானால் கர்நாடக சென்று கேளுங்கள். அவரை சும்மாவா தமிழக தலைவராக மாற்றினோம். நியாத்திற்கு போராடுபவர்களே தைரியசாலிகள். பாஜகவிற்கு துணிச்சல் உள்ளது.
ஓகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டம்: தமிழகத்துக்கு சட்டப்படி உரிமை உண்டு: கர்நாடகாவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
சவால் விடுகிறேன் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் சாலைக்கு வந்து முதல்வரிடம் சிபிஐ விசாரணை செய்ய வலியுறுத்துங்கள். மக்கள் சேவை தான் முக்கியம் என்பவர்கள் இறங்கி போராடுங்கள். தமிழக காவல்துறையை கை கூப்பி வேண்டுகிறேன். மக்களுக்காக வேலை செய்யுங்கள். அரசியல் கட்சிகளுக்காக வேலை செய்யாதீர்கள்.
மலரஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ‘அரியலூர் மாணவியின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். பெண் குழந்தையின் தாயாக கூறுகிறேன் முதல்வர் இதுவரை இந்த மரணம் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை. இழந்தவர்களுக்கு தான் வலி தெரியும்.
தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று யாராவது கூறமுடியுமா? தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று முதல்வர் அறிக்கை வெளியிடுவாரா என கேள்வி எழுப்பினார். மேலும் இறந்த மாணவியின் புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தியது சட்டத்திற்கு எதிரானது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது சட்டத்திற்கு உட்பட்டு தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆர்ப்பாட்டம் நடத்தும் போது மாணவியின் புகைப்படத்தை பயன்படுத்தவில்லை. மலர் அஞ்சலிக்காக மட்டுமே மாணவியின் புகைப்படத்தை தனியாக பயன்படுத்தினோம் என்றார். தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.