காவல்துறை பாதுகாப்புடன் இருந்துகொண்டு பிற மாநில மக்களுக்கு எதிராக பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண வெற்றி விழா மற்றும் அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு பரப்புரை இயக்க துவக்க விழா நடைபெற்றது. புதிய ரயில் நிலையம் தொடங்கி, பனகல் சாலை வழியாக நடைபெற்ற பேரணியில், குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில், மேளதாளங்கள் முழங்க கே.எஸ்.அழகிரிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற, காவிரி டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ஈரோட்டில் காங்கிரஸின் வெற்றி எழுதப்பட்டு விட்டதாகக் கூறினார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வடமாநிலத் தொழிலாளர்கள்தான் காரணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதற்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, வட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்வதால் தான் திருப்பூரில் நூல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்று தெரிவித்தார். வட இந்தியர்கள் இல்லையென்றால் திருப்பூரில் தொழிற்சாலைகள் இயங்காது என்றும், அவர்களை தாக்கினால் வடமாநிலங்களில் பணியாற்றும் தமிழர்கள் தாக்கப்படும் சூழல் உருவாகும் என்றும் எச்சரித்தார்.
அருந்ததியர் சமூக மக்கள் தெலுங்கு பேசுவதால் அவர்களை வந்தேறிகள் என்று சீமான் பேசுவதாகவும், பெரியார், வைகோ உள்ளிட்ட தலைவர்களையும் அவர் இவ்வாறு விமர்சிப்பதாகவும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார்.அரசியல் ஆதாயத்துக்காக இப்படி செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி, தமிழர்களின் பெருமையை குறைக்கும் வகையில் சீமான் நடந்துகொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: KS Alagiri, Seeman, Thiruvarur