கிருஷ்ணகிரி அருகே வாகன விபத்து ஏற்படுத்தியவரை கடத்தி சென்று ரூ. 1.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலிசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் லாயுடு பர்க் (31). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி பெங்களூரில் இருந்து தன்னுடைய காரில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கிருஷ்ணகிரியை அடுத்த திம்மாபுரம் பகுதியில் முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாரத விதமாக மோதியுள்ளார்.
அதில் இருச்சக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேரும் காயமடைந்துள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் காரை ஓட்டி வந்த ஆல்வின் இந்த விபத்து குறித்து காவல்நிலையத்திற்க்கு சென்றுவிடலாம் என்று கூறியுள்ளார். அவ்வழியாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை தடுத்து நிறுத்தி இந்த விபத்து குறித்து காவல் நிலையம் செல்ல வேண்டாம் எனவும், இதை சுமூகமாக பேசி முடித்துக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய ஆல்வின் அவர்களுடன் சென்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை காவேரிபட்டினத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கடத்தி சென்று அடைத்து வைத்து அவரை மிரட்டி 1.5 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் பணம் தரவில்லை என்றால் உன்னை விடுவிக்க முடியாது என்று கூறி ஆல்வினை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து அச்சமடைந்த ஆல்வின் லாயுடு இதுகுறித்து அவருடைய தந்தையிடம் தகவல் அளித்துள்ளார். ஆல்வினின் தந்தை காவேரிபட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் உடனடியாக இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் ஆல்வின் லாயுடுவை கடத்தியவர்கள் காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், அன்பரசன் மற்றும் லோகநாதன் ஆகிய மூன்று பேர் கொண்ட கும்பல் என தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலிசார் அவர்களிடம் இருந்து ஆல்வின் லாயுடுவை மீட்டனர்.பின்னர் அவர்கள் மூன்று பேர் மீதும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
Also read... தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கியதாக பதிவான வழக்கு - காவல் உதவி ஆணையரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
விபத்து ஏற்படுத்தியவரை கடத்திச்சென்று 1.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவேரிபட்டினம் பகுதியில் இதுபோன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதனை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செய்தியாளர்: குமரேசன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kidnapping Case, Krishnagiri