கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே பதிவேடுகள் சரிபார்க்கும் போது ஏற்பட்ட பிரச்சனையில் பஞ்சாயத்து தலைவியை தாக்கிய ஊராட்சி செயலாளர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியத்துக்கு உட்பட்டது தாமோதரஹள்ளி பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் வெண்ணிலா முருகேசன். இந்த பஞ்சாயத்தில் ஊராட்சி செயலாளராக சின்னசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் கிராம சபைக் கூட்டத்திற்கு பதிவேடுகள் சரிபார்க்கும் பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் பஞ்சாயத்து தலைவி வெண்ணிலாவின் கணவர் முருகேசன் மற்றும் ஊராட்சி செயலாளர் சின்னசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் இந்த தகராறு முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த தகராறை தடுக்க முயன்ற பஞ்சாயத்து தலைவி வெண்ணிலாவை ஊராட்சி செயலாளர் சின்னசாமி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பஞ்சாயத்து தலைவி வெண்ணிலா காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Also read... கையில் சாதி கயிறு கட்டுவதில் மோதல் - 12ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு
மேலும் இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவி வெண்ணிலாவிடம் கேட்டபோது, தங்கள் ஊராட்சியின் செயலாளர் சின்னசாமி பஞ்சாயத்துக்கான கணக்கு வழக்குகள் எதுவும் சரியாக வழங்குவதில்லை எனவும், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான பணி ஆணைகளை வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தியும், சரியாக அலுவலகத்திற்கு வராமலும் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் ஒரு பெண் என்று கூட பாராமல் அனைவரின் முன்னிலையிலும் தன்னை தகாத வார்த்தைகளாலும், ஒருமையிலும் பேசி வருகிறார் எனவும் இதனை தட்டிக்கேட்ட போது தனது கணவரையும் ஒருமையில் பேசியுள்ளர் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பாரூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-செய்தியாளர்: குமரேசன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Krishnagiri