கிருஷ்ணகிரி அருகே தந்தையை கொலை செய்த கணவனை உறவினர்களுடன் கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் அருகே உள்ள பண்ணந்தூர்இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் நரேஷ்குமார்(வயது 40). இவர் மேற்கு வங்கமாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கல்யாணம் ஆகி சசிகலா (36) என்ற மனைவியும் 2 மகன்,மற்றும் ஒரு மகள் உள்ளனர். நரேஷ்குமாருக்கும், அவரது மனைவி சசிகலாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மனைவி வீட்டில் சண்டை போட்டுவிட்டு தனது அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
Also Read: காதல் திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு - செங்கல்பட்டு போலீஸார் தீவிர விசாரணை
இந்த நிலையில் கடந்த ஆண்டு (6.3.2021) அன்று தனது மாமனார் மகாலிங்கத்தின் வீட்டிற்கு நரேஷ்குமார் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட தகறாரில் நரேஷ்குமார் தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து வந்ததற்கு மாமனார் தான் காரணம் என்று கூறி அவரை கத்தியால் குத்தி உள்ளார் அதில் மாமனார் மகாலிங்கம் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக ராணுவ வீரர் நரேஷ்குமார் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அங்கிருந்து சேலம் மத்திய சிறையில் நரேஷ்குமார் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நரேஷ்குமார் ஜாமீனில் விடுதலை ஆனார். இதன்பிறகு நரேஷ்குமாருக்கும், அவரது மனைவி குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி அவரது சொந்த ஊரான பண்ணந்தூருக்கு சென்றுள்ளார். இதை அறிந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நரேஷ்குமாரை சுற்றிவளைத்து கட்டையால் தாக்கியுள்ளனர்.
Also Read: யூடியூபில் விஷம பேச்சு, பப்ஜி மதனை ஏன் வெளியில் விட வேண்டும்? நீதிமன்றம் அதிரடி கேள்வி
மேலும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த நரேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமார்சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார். இது தொடர்பாக முதலில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்த பாரூர் போலீசார் தற்போது அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக நரேஷ்குமாரின் மனைவி சசிகலா (36), நேற்று கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இந்த நிலையில் மேலும் இந்த கொலை தொடர்பாக அவரது உறவினர்களான முன்னாள் ராணுவ வீரர் பரமேஸ்வரன் (38), திருப்பூர் மாநகர ஆயுதப்படைகாவலர் மகேஸ்வரன் (30), பரமேஸ்வரனின் மனைவி தீபா (35), மகேஷ்வரனின் மனைவி ராஜகுமாரி (27), மற்றும் வடிவேல் (30), சதீஷ் (27) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தற்போது தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: ஆ.குமரேசன் (கிருஷ்ணகிரி) உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.