ஓசூர் அருகே கோலமாவுக்காக கல் சேகரித்த போது மண் சரிந்து இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே சாம நத்தம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக சமூக விரோதிகள் செங்கல் சூளைகளுக்கு 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மண் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் 10 அடிக்கு கீழ் வெள்ளை நிற கற்கள் காணப்படுகின்றன. இந்த கற்களை பொடி செய்து கோலமாவு பயன்படுத்த ஆசைப்பட்ட சாம நத்தம் கிராமத்தை சேர்ந்த ராதா, லட்சுமி, உமி, விமலம்மா ஆகிய நான்கு பேர் இன்று கோலமாவு கல் எடுப்பதற்காக அந்த பகுதிக்கு சென்று குழி தோண்டினர்.
கோலம் மாவு எடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து நான்கு பெண்களும் மண்ணில் சிக்கிக் கொண்டனர்.அருகில் இருந்தவர்கள் இதைப் பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். மண்ணில் சிக்கி கொண்ட நான்கு பெண்களும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு: கழிவுநீர்தொட்டி சுத்தம் செய்தபோது விபரீதம்
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ராதா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் 2 பேரை மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலமாவு சேகரிக்கச் சென்று ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: செல்வா- ஓசூர்
மேலும் படிங்க: மகள்களுடன் கிணற்றில் சடலமாக மிதந்த ஆட்டோ ஓட்டுனர்.. செங்கல்பட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.