முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோடநாடு வழக்கு : புதிய விசாரணைக்கான பின்னணி என்ன ?

கோடநாடு வழக்கு : புதிய விசாரணைக்கான பின்னணி என்ன ?

கோடநாடு பங்களா

கோடநாடு பங்களா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த கோடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. புதிய விசாரணை பின்னணி என்ன ?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொலையும், கொள்ளையும் ஒரு சேர நடந்தது தான் கோடநாடு வழக்கின் ஒரே வரி செய்தி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் ஏழு மலைகளை கொண்ட கோடநாடு டீ எஸ்டேடின் பங்குதாராக இருந்தனர். இந்த எஸ்டேட் அமைந்துள்ள மலைகளில் ஒரு மலையின் உச்சியில் தான் அமைந்துள்ளது கோடநாடு பிரம்மாண்ட பங்களா.

முதல்வராக இருந்தவரை ஜெயலலிதா இந்த பங்களாவை முதல்வரின் முகாம் அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்தார். பங்களாவை சுற்றி 23 சிசிடிவி ,பங்களாவின் உள்ளே செல்ல பயன்படும் மூன்று பிரதான நுழைவு வாயில்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, கவனிப்பாரற்று கிடந்த பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை கும்பல் ஒன்று நுழைந்தது.

பணியில் இருந்த பாதுகாவலர்களான ஓம்பகதூர் மற்றும் கிருஷ்ணபகதூரை கொலை வெறியுடன் தாக்கிய கும்பல் பங்களாவின் உள்ளே சென்று சில ஆவணங்களையும், பொருட்களையும் திருடி சென்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். விசாரணையைத் தொடங்கிய கோத்தகிரி போலீசார், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கோவையை சார்ந்த பேக்கரி உரிமையாளர் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் தேடிக்கொண்டிருந்த நிலையில், கைதுக்கு முன்பே முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த விவகாரம் பெறும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வழக்கில் இன்னோர் முக்கிய குற்றவாளியான சாயானும் சில நாட்களில் சாலைவிபத்தில் சிக்கியதும் பெறுத்த சந்தேகத்தை கிளப்பியது.

சயான், வாளையாறு மனோஜ், தீபு, சதீசன்,ஜம்சீர் அலி, உதயக்குமார் உள்ளிட்ட 10 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற காவலில் இருந்த நிலையில் கடந்த மாதம் சயானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

தற்போது நிபந்தனை ஜாமினில் உதகையில் தங்கியபடி, வழக்கு விசாரணைக்கு சயான் ஆஜராகி வருகிறார். கடந்த 13 வழக்கு விசாரணையின் போது கோத்தகிரி காவல்துறையினர் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக மாவட்ட மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றம் கொடுத்த உத்தரவின்படி, இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை மாலை வழக்கின் முதல் குற்றவாளியான சயானிடம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை செய்துள்ளனர். அவரிடம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், குன்னூர் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். விசாரணையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சொல்லி தான் இந்த கொலை ,கொள்ளையில் ஈடுப்பட்டதாகவும் சயான் தனது வாக்குமூலத்தில் சொல்லியிருப்பதாக தெரிகின்றது.

அத்துடன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருடன் கனராஜ் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களின் கட்டளை படிதான் கனகராஜ் செயல்பட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் புதிதாக சயான் சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறு விசாரணை குறித்து 27 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு பின்னர் தான் இந்த வழக்கு செல்லும் திசை என்ன என்பது தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Crime News, Kodanadu estate