சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரிநகரைச் சேர்ந்தவர்கள் 54 வயதான பூமாலை-முத்து தம்பதி. 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்த பூமாலை 2010-ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பினார். கடந்த 2013-ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் படிப்படியாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.அதனால், தனது வீட்டிற்கு எதிரே உள்ள, இயேசு நம்மோடு சபையில் ஜெபத்திற்கு சென்று வந்தார்.
அங்கு, காரைக்குடி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பூண்டு வியாபாரி அருளானந்த சாமி, அவரது மனைவி புஷ்பா, மகன் நெப்போலியன், மகள் நான்சி ஆகியோர் அறிமுகமாகி, பூமாலையின் வீட்டில் அடிக்கடி ஜெபம் செய்து வந்தனர். நட்பாகப் பழகியுள்ளனர். காரைக்குடியில் உள்ள பிரபல மருத்துவமனையில் தனது மகனும், மகளும் வேலை செய்வதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம் என்று அருளானந்த சாமி கூறியுள்ளார். இரண்டு சிறுநீரகங்களையும் மாற்ற 60 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறியுள்ளார் அருளானந்த சாமி.
அதை நம்பிய பூமாலை தனது வீட்டை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 3 தவணைகளாக 60 லட்சம் ரூபாயை அருளானந்த சாமியிடம் கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட அருளானந்த சாமி இப்போது வரை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும் பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பூமாலை குற்றம்சாட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி கேட்டபோது, அருளானந்த சாமியும் அவரது குடும்பத்தினரும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறுகிறார் பூமாலை.
மேலும் படிக்க...
அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்.. உலகமே எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள்.. அடுத்த அதிபர் யார்?
இது குறித்து பூமாலை காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட அருளானந்த சாமியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி , மகன், மகள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உடல் நலம் குன்றிய பூமாலையிடம் இருந்து பெற்ற பணத்தை எப்படியாவது ஏமாற்றி விடலாம் என நினைத்ததாக, அருளானந்த சாமி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்கின்றனர் போலீசார். இதுபோன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுகிறோம் என்று சொல்வோரை நம்பி ஏமாற வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறையால் நடத்தப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் பதிவு செய்த பிறகே அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.