கரூரில் 24 ஏக்கர் நிலத்தை மூதாட்டியிடம் இருந்து போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கரூர் தொழிலதிபர் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழிலதிபரால் தன் உயிருக்கு ஆபத்து நேரிடும் அச்சம் ஏற்பட்டு உள்ளதாகவும், அதனால் பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள நல்லியம்பாளைத்தை சேர்ந்த பாப்பாத்தி , சரஸ்வதி, அர்ஜுனன் இவர்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் நிலத்தை கடந்த 2007ஆம் ஆண்டு கோடந்தூர் கிராம ஊராட்சித் தலைவரும் அதிமுகவை சேர்ந்த வருமான தொழிலதிபர் ரவிச்செல்வன் என்பவர் 20 ரூபாய் பத்திரத்தில் மோசடியான முத்திரைத்தாள் மூலம் அர்ஜுனன் மட்டும் கிரய ஒப்பந்தம் செய்து கொடுத்ததாகக் கூறி, பதிவு செய்யப்படாத ஒரு போலியான கிரைய ஒப்பந்தத்தை உருவாக்கி அதன் மூலம் முழு சொத்தையும் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாப்பாத்தி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.இந்நிலையில் 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தால் பாப்பாத்தி மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கில் கடந்த 10ஆம் தேதி அர்ஜுனன், பாப்பாத்தி, சரஸ்வதி ஆகியோரிடமிருந்து 24 ஏக்கர் நிலத்தை மோசடி முத்திரைத்தாள் மூலம் ரவிச்செல்வன் அபகரிக்க முயன்றாரா என்பது குறித்து கரூர் சிபிசிஐடி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
ALSO READ | ஆன்லைன் குளறுபடி.. மூட்டைக்கு 27 ரூவா கேட்கும் அதிகாரிகள்.. நெல் கொள்முதலில் மெத்தனம் கரூர் விவசாயிகள் கண்ணீர்
விசாரணையை 12 வாரத்தில் முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மூதாட்டி பாப்பாத்தி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனக்கு சொந்தமான நிலத்தை ரவிச்செல்வன் அபகரிக்க முயன்தாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபர் மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடி நடத்த உள்ள நிலையில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் K.R.ரவிச்செல்வன் கோடந்தூர் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தபோது கோடந்தூர் ஊராட்சியில் செய்த நிதி முறைகேடுகள், ஊழல்கள், மோசடிகள் மட்டுமின்றி அவர் மீது அரசு நில அபகரிப்பு, தீண்டாமை கம்பிவேலி அமைத்து ஆக்கிரமிப்பு, மின்சார திருட்டு, நடு ஆற்றில் வட்டக்கிணறு அமைத்து தண்ணீர் திருட்டு, சட்ட விரோத ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதையில் ஆபத்தான மின்சார வயர்களை புதைத்து ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் குடிநீர் கைப்பம்பிற்கு அருகில் சட்ட விரோத ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் திருட்டு செய்வது மட்டுமின்றி தென்னிலை காவல் நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கொடுக்கப்பட்ட தென்னிலை காவல் நிலைய புகார் எண் CSR-2/2022 மேலும் தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் கொடுக்கப்பட்ட தென்னிலை காவல் நிலைய புகார் எண் CSR-184/2021 மட்டுமில்லாமல், அதே பகுதியை சார்ந்தவரை காரில் கடத்தி சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி வெற்று பத்திர தாள்களில் கையொப்பம் பெற்ற வழக்கு தென்னிலை காவல் நிலைய FIR 318/2020 உள்ளிட்ட இன்னும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புகார் கூறிய ரவிச்செல்வனிடம், புகார் குறித்து கேட்டபோது நான் வெளியூரில் இருக்கிறேன். நேரில் வந்து பேசிக் கொள்ளலாம். மேலும் இந்த புகார் பொய்ப் புகார் என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார் .
தி.கார்த்திகேயன்,செய்தியாளர் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.