அதிமுக ஆட்சியில், தொழிற்சாலைகளை அதிகளவில் கொண்டு வந்து இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கினோம். தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா ஸ்கூட்டி போன்ற அம்மா ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகிறார் மு.க ஸ்டாலின் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் (வயது 87). இவர் அதிமுக தொடக்க காலத்தில் இருந்து (1972 வருடம்) தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார். இவர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் இரண்யமங்களம் ஊராட்சி மன்ற தலைவராகவும், எம். ஜி.ஆர் இறப்பிற்கு பின் அதிமுக ஜெ.அணி, ஜா.அணி என இரண்டாக பிளவு பட்டபோது 1989 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெ.அணி சார்பில் குளித்தலை தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அதிமுகவில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் குளித்தலை ஒன்றியச் செயலாளராகவும், கரூர் மாவட்ட செயலாளராகவும், மாவட்ட அவைத் தலைவராகவும், மாநில கழக அமைப்புச் செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாகவும், 2005 -06 காலகட்டத்தில் ஆறு மாதங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் திரு உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ஸ்டாலின் திறந்து வைக்கின்றார்.
அதிமுக விவசாயம் , மருத்துவம் , குடிநீர் என அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்திய அரசு. தற்போது உள்ள திமுக அரசு மூடுவிழா கொண்டுள்ளது. கடந்த 4 வருட அம்மா அரசு ஆட்சி காலத்தில் நல்ல திட்டங்களை கொண்டு வந்தோம். தற்போது 11 மாத திமுக ஆட்சியில் அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ஆளுநருக்கும் எனக்கும் சுமூகமான உறவு உள்ளது.. அவருக்கு மரியாதை கொடுப்போம்... முதல்வர் மு.க. ஸ்டாலின்
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல நல்ல திட்டங்கள், மருத்துவ கல்லூரியில் 7.5 % இட ஒதுக்கீடு, காவிரி - குண்டாறு - இணைப்பு திட்டம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை வழங்கினோம். புரட்சி தலைவர் எம். ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக கொண்டு வந்தனர்.
அதிமுக ஆட்சியில், தொழிற்சாலைகளை அதிகளவில் கொண்டு வந்து இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கினோம். தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா ஸ்கூட்டி போன்ற அம்மா ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகிறார் மு.க ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் விளம்பர பிரியராக உள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.