மேகதாதுவில் மத்திய அரசின் அனுமதியின்றி கர்நாடகம், அணை கட்டுகிறதா என்பது குறித்து ஆராய தென்மண்டல தேசிய பசுமைத் தீர்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய குமாரசாமி அரசின் கோரிக்கையை ஏற்று ரூ.5,912 கோடி செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசு, அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அளித்தது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் பணி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டிவருவதாக ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியானது. இதனை அடிப்படையாக கொண்டு வழக்கு பதிவு செய்துள்ள தென்மண்டல பசுமைத் தீர்பாயம், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை அமைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும், தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டப்படுகிறதா? அணை கட்டப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா? என்பதை ஆய்வு செய்ய, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மூத்த அதிகாரி , காவிரி நீர் மேலாண்மை மூத்த அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவையும் தீர்ப்பாயம் அமைத்துள்ளது. இக்குழு வரும் ஜூலை 5ம் தேதிக்குள் விரிவான அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka, National Green Tribunal