கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் தனது ஆசிரியை மதமாற்றத்தில் ஈடுபடுவதாக போலீஸில் குற்றஞ்சாட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அதிகாரிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே வெடித்த மோதல்.. ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் அரிவாளுடன் ஏறியும் இளைஞர்கள் அட்டூழியம்
மேலும், கிறிஸ்தவ மத பிராத்தனைகளை சொல்லி பிராத்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் நேற்றும் தையம் வகுப்பிற்கு சென்ற மாணவிகளிடம் இதே நடவடிக்கையில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து மாணவிகள் உடனடியாக தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவலளித்து அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசாரும் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் முன் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: மொட்டைமாடியில் பிளாஸ்டிக் தார்ப்பாய் நிழலில் இயங்கும் வகுப்பறை.. வெப்பம் தாங்காமல் மாணவர்கள் தவிப்பு
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி அவர்களிடம் தொடர்பு கொண்டு விளக்கம்கேட்டபோது மதமாற்ற சர்ச்சை வீடியோ தொடர்பாக சம்பத்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரணை நடத்தி அவர் மீது துறைவாரி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு பின் துறைவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.