கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில்
காங்கிரஸ் கட்சி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் சிலர் போட்டியிட்ட நிலையில், அவர்களை குமரி மாவட்ட காங்கிரஸ் தற்காலிகமாக நீக்கியது செல்லாது என மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்ட நிலையில், கே.எஸ். அழகிரி மாநில தலைவர் பதவிக்கு தகுதியற்றவர் என, குமரி மாவட்டத்தில் இருந்து காங்கிரஸ் விவசாய அணி மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு புகார் அளித்து போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இது குறித்து அவரிடம் கேட்ட போது, “அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக சொந்தக் கட்சியை சேர்ந்த சிலர் சுயேச்சையாக போட்டியிட்டனர். இவர்களையும், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சிலரையும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தற்காலிகமாக கட்சியைவிட்டு நீக்கியது. ஆனால் மாநிலத் தலைமையின் அனுமதி இல்லாமல் நீக்கியது செல்லாது என்று அறிக்கைவிட்டு கட்சி கட்டுப்பாட்டை சீர் குலைக்கும் நபர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செயல்படுகிறார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக யார் வேலை செய்தாலும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக யார் சுயேச்சையாக போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காது என்று அறிக்கை வாயிலாக கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தான் வகிக்கும் பதவிக்கே தகுதியற்றவர். அதனால்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இந்த செயல்பாடு குறித்து புகார் மனு அனுப்பியுள்ளேன்” என்றார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநில தலைவர்களாக இருந்த பலரும் கட்சி பணத்தை கபளிகரம் செய்துள்ளதாகவும், கே.எஸ்.அழகிரி பணம் பெற்று கொண்டு தான் தேர்தலில் வேட்பாளர் பெயர் சேர்த்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில் கே.எஸ்.அழகிரி வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்கள் ஒழுங்குமீறல் நடவடிக்கைக்கு உட்பட்டிருக்கும்பட்சத்தில் காங்கிரஸ் அமைப்பு விதிகளின்படி, சம்மந்தப்பட்டவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டை மாநிலத் தலைமைக்கும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கும் முறையாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.ராஜன்
Must Read : சுத்தியலா? சாவியா?... பேரூராட்சி தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு சொன்ன ரகசியம்!
ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்குப் பின்பே, அவர்களின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாநிலத் தலைமைக்கும், ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கும் தகவல் தெரிவிக்காமல் தாங்களே ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் அது செல்லாது. நடைமுறைக்கு வராது’’எனவும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - ஐ.சரவணன், நாகர்கோவில் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.