குழந்தைகளின் கண் முன்னே மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த கணவர் - பதைபதைக்கும் காட்சி.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்னாலம்பாடி ஊராட்சியில் வசித்து வருபவர் ரவி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். ரவியின் இரண்டாம் மனைவி பெயர் அருணா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது .இதனால் அருணா தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தன் பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேற்று மீண்டும் சின்னாலம்பாடி கிராமத்தில் உள்ள தன் கணவர் ரவி வீட்டிற்கு தன் பிள்ளைகளுடன் செல்ல இருந்தார். அங்கு செல்வதற்கு முன்பு சாலவாக்கம் காவல்நிலையத்தில் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் தனது கணவர் ரவியும் அவருடைய முதல் மனைவியும் தான் காரணம் என எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்துவிட்டு தன் உறவினர்கள் மற்றும் பிள்ளைகளுடன் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததன் காரணமாக ஆத்திரமடைந்த ரவி கையில் அரிவாளுடன் தன் பிள்ளைகளின் எதிரே கண்மூடித்தனமாக தனது மனைவி அருணாவை வெட்ட முயற்சித்திருக்கிறார். இதில் அருணாவிற்கும் அவரது சகோதரருக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ரவி என்பவர் தமிழக முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் உதவியாளர் எனக் கூறி பல இடங்களில் தொடர்ச்சியாக மோசடி செய்து வருவதாகவும் அருணா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட காவல் துறையில் புகார் அளித்தும் காவலர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் அளிக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் உடனடியாக இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்
செய்தியாளர்: சந்திரசேகர்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.