தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வரும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கமல்ஹாசன் உடன் கரம் கோர்த்துள்ளன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வேட்பாளர்களை நேர்காணல் செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இன்று காலை கட்சியின் பொது செயலாளர், நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களை கமல்ஹாசன் நேர்காணல் செய்தார். அப்போது உங்களுக்கு தேவையான தேர்தல் செலவுகளை நீங்களேதான் செய்துகொள்ள வேண்டும், கட்சி செலவு செய்யாது என்று கூறிய கமல்ஹாசன், தொகுதியின் நிலை, தொகுதிக்கு தேவையானவை உள்ளிட்டவை குறித்தும் வேட்பாளர்களிடம் கேள்வி எழுப்பி பதில் பெற்றார்.
கமல்ஹாசன், பழ.கருப்பையா, சுரேஷ் அய்யர், பொன்ராஜ் உள்ளிட்டோர் இதுவரை 25 பேரிடம் நேர்காணல் செய்துள்ளனர். மார்ச் 3-ம் தேதி மாலை ராமவரத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செய்து இரண்டாம் கட்ட பிரசாரத்தை ஆலந்தூர் தொகுதியில் தொடங்குகிறார் கமல்ஹாசன்.