அ.தி.மு.க தலைவர்கள் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லவேண்டிய நிலைவரும் - கமல்ஹாசன் விமர்சனம்
அ.தி.மு.க தலைவர்கள் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லவேண்டிய நிலைவரும் - கமல்ஹாசன் விமர்சனம்
பிரச்சாரத்தில் கமல்ஹாசன்
கஜா புயலின் போது ஹெலிகாப்டரில் சென்றது போல, மக்களுக்கு மத்தியில் பிரச்சாரத்திற்கு செல்லமுடியாமல் ஹெலிகாப்டரில் செல்லும் நிலை வரும் என்று கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் இரண்டாவது கட்டத் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னையை அடுத்துள்ள பூவிருந்தவல்லியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பூவிருந்தவல்லி, நகரத்திற்கான அருகதை உள்ள இடம். நியாயமாக இங்கு வசதிகள் இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பாதி நகரம் பாதி கிராமமாக உள்ளது. இங்கு 50 கிராமங்களுக்கு மேல் உள்ளன. ஆனால் விவசாயிகளுக்கான நீர் மேலாண்மை கடைப்படிக்கப்படவில்லை. மழை காலத்தில் ஊரே வெள்ளக்காடாகி விடுகிறது.
பூவிருந்தவல்லியில் பூ உதிர்ந்து விட்டது. அதை சரி செய்ய நியாயமான ஒரு அரசு உங்களுக்கு அமைய வேண்டும். நம்மவர் ஆட்சி அமைய வேண்டும் என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. நான் நம்மவர் என்று சொல்வது என்னை மட்டுமல்ல, உங்களையும் சேர்த்து தான்.
நமக்கு பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தொழில் கெட்டுப் போய்விடுமோ என்று கவலைப்படுகிறார்கள். பயமெல்லாம் கிடையாது வீரமானவர்கள் தான். ஆனால் அந்த வீரத்தை எல்லாம் கிரிமினல் ஆக்டிவிடீஸ்க்கு பயன்படுத்துகிறார்களே தவிர நல்லவற்றிற்கு பயன் படுத்துவதில்லை.
எம்ஜிஆர் என்று சொன்னவுடன் அவர்கள் பயப்படுவதற்கு காரணம், குவார்ட்டர், ஸ்கூட்டர், கை நிறைய பணம் இத்தனை கொடுத்தும் வராது போகலாம் என சொல்லும் அளவிற்கு நிலை இருப்பதால், அந்த கலக்கத்தாலே எம்ஜிஆர் என்னது என்று சிறுபிள்ளைத்தனமாக காலை உதைக்கிறார்கள். எம்ஜிஆர் படத்தை ஸ்டாம்ப் சைசிற்கு போட்டவர்கள் தானே அவர்கள்.
எம்ஜிஆர் வழியில் நாம் சென்றால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. உங்கள் வழி, வேறு ஊருக்கு செல்லும் வழி... கூவத்தூருக்கு செல்லும் வழி. கூவத்தூர் நல்ல ஊர் தான். ஆனால் அங்கே சென்று கெடுத்துவிட்டனர். ஊரே அப்படி என்றால் கோட்டையை?
மாற்றத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதன் அடையாளம்தான் நீங்கள். தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் தான் உள்ளன. அதனால் நான் மெதுவாக ஆரம்பிக்கிறேன். ஏனெனில் நான்கு மாதம் ஒருவர் தூங்காமல் இருந்தால் பைத்தியம் பிடித்து விடும்.
கஜா புயலின் போது ஹெலிகாப்டரில் சென்றது போல, மக்களுக்கு மத்தியில் பிரச்சாரத்திற்கு செல்லமுடியாமல் ஹெலிகாப்டரில் செல்லும் நிலை வரும். அதை நீங்கள் தான் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். என்மேல் அன்பு காட்டும் அளவிற்கு விமர்சனத்தையும் காட்டலாம். என் மீதான உரிமையை நான் உங்களுக்கு அளிக்கிறேன். ஆனால் அதை அவர்களால் தாங்க முடியாது. ஏனெனில் அவர்கள் செய்த குற்றப் பட்டியல் அதிகமானது. உங்கள் அன்பு, உங்கள் முகம் அனைத்தும் எனக்கு சொல்வது நாளை நமதே’ என்று தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.