கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி கடந்தவாரம் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து மரணமடைந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர். மாணவியின் தாய் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மக்கள் போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கலவரத்தில் முடிந்தது. பள்ளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டது. பள்ளியில் இருந்த பொருள்களை போராட்டக்காரர்கள் சூறையாடினார். போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீஸார் விரட்டினர். போலீஸார் சிலரும் இதில் காயமடைந்தனர். இதனையடுத்து அந்தப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவும் நியமிக்கப்பட்டது. பெற்றோர் தரப்பில் மறுகூராய்வின்போது வழக்கறிஞர் இருக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தாங்கள் கூறும் மருத்துவர் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் நேற்று மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டது.
மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர், உறவினர் தரப்பில் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. இதனையடுத்து போலீஸார் மாணவியின் வீட்டிற்கு சென்று உடலை பெற்றுக்கொள்ளுமாறு நோட்டீஸ் ஒட்டினர். இந்நிலையில் மாணவியின் தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மற்றும் PS நரசிம்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தங்களது தேர்விலான மருத்துவ நிபுணர்களை நியமிக்க மாணவி தந்தை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டது நாங்கள் தான். உரிய நியாயமான விசாரணையை தமிழ்நாடு அரசு செய்யவில்லை என மாணவியின் தந்தை குற்றச்சாட்டினார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நீங்கள் உயர்நீதிமன்றத்தில் இவை அனைத்தையும் கூறலாமே ? உயர்நீதிமன்றத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கை திரும்பப் பெற்று உயர்நீதிமன்றம் செல்லுங்கள் அல்லது வழக்கு தள்ளுபடி செய்யபடும் என நீதிபதிகள் கூறினர். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்று கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை வழக்கை திரும்ப பெற்றார். இந்நிலையில் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் உடலை அடக்கம் செய்ய வேப்பூர் பெரியநெசலூரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அசம்பாவிதம் எதும் நடக்காமல் இருக்க அந்தப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.