கள்ளக்குறிச்சியில் மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதிவிட்டு கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான ஹரிகோவிந்தன் (வயது 27). இவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த கீர்த்திகா (வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்து மூன்று மாதம் கீர்த்திகாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் மனமுடைந்த கீர்த்திகா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த ஹரிகோவிந்தன் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும் கீர்த்திகா இல்லாத உலகத்தில் தான் எப்படி வாழ்வது என்றும் சக நண்பர்களிடம் மன வேதனையோடு கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் அங்கு உள்ள சுடுகாட்டில் கீர்த்திகா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்ற ஹரிகோவிந்தன் கீர்த்திகாவின் ஆவி தனது உடலில் பற்றிக் கொண்டதாகவும் அதனால் கீர்த்திகாவின் குரலிலேயே தான் கீர்த்திகாவிடம் செல்லப் போவதாகவும் கூறி கதறி அழுதுள்ளார். இதைபார்த்த அவரது சக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
தொடர்ந்து அவர் உணவு சாப்பிடாமலும் கீர்த்திகா தன்னைப் பிரிந்து சென்றதால் அவருடனே செல்லப் போகிறேன் என்று கூறியும் புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணி ஆகியும் ஹரிகோவிந்தன் வீட்டிற்கு வரவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் நண்பர்களும் உறவினர்களும் ஹரிகோவிந்தனை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அவரது செல்போன் நம்பருக்கு தொடர்ந்து கால் செய்த நிலையில் அவரது செல்போன் அடித்தும் எடுக்கவில்லை. இன்று காலை மீண்டும் ஹரிகோவிந்தனின் செல்போனுக்கு அழைப்பு விட்டதோடு அவரை தேடி பார்த்தனர்.
இந்நிலையில் அவரது வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு விவசாய கிணற்று பகுதியில் ஹரிகோவிந்தன் அணிந்திருந்த கைலி கிடந்துள்ளது. இதனை பார்த்த அவரது உறவினர்கள் அந்த கைலியை எடுத்து பார்த்தபோது அதன் கீழே அவரது செல்போனும் கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஹரிகோவிந்தன் உறவினர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி நவீன கொக்கிகளைக் கொண்டு தேடிப் பார்த்தபோது ஹரிகோவிந்தன் சடலமாக மீட்கப்பட்டார்.
அண்மையில் பெய்த தொடர் மழையால் விவசாய கிணற்றில் முழுமையாக தண்ணீர் இருந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக ஹரிகோவிந்தன் உடல் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் பற்றிய தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிகோவிந்தன் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்பொழுது ஹரிகோவிந்தன் டைரியில் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்று மாதம் கருசிதைவு ஏற்பட்டதால் திருமணமான 6 மாதத்திலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதும் அவரது இழப்பை தாங்க முடியாமல் கனத்த இதயத்தோடு இளைஞர் தற்கொலை செய்து கொண்டதும் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : செந்தில் குமார் (கள்ளக்குறிச்சி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.