மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
புகார் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஜெ. தீபா, “நான் எனது கட்சியில் உறுப்பினர்களாக இருந்த, ஈ.சி.ஆர். ராமச்சந்திரன், ராஜா ஆகியோரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் நீக்கினேன். அதன்பின் அவர்கள் ரவுடிகளோடு என் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நான் ஏற்கனவே, புகார் அளித்துள்ளேன். தற்போது நான் அரசியலை விட்டு விலகி இருக்கிறேன். 2 மாதங்களுக்கு முன்பு சிறிய விபத்தில் சிக்கி, உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில ராஜா, ராமச்சந்திரன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு அளிக்கிறார்கள். அவர்களால் எனக்கும், எனது கணவரது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து உள்ளது. பொது இடங்களில் தொடர்ந்து வந்து தொந்தரவு அளிப்பதுடன், ஒருமுறை கீழேயும் தள்ளி இருக்கிறார்கள் எனவே, நீங்கள் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
ராஜா, ஜெ. தீபாவிடம் கார் டிரைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.