சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில், அக்னிச் சட்டி படத்துடன் கூடிய காலண்டர் இடம்பெற்றிருந்தது. அது வன்னியர் சமூகத்தை அவமதிப்பது போல் உள்ளதாக கூறி, பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதையடுத்து அந்தக் காட்சி நீக்கப்பட்டது.
மேலும் வன்னியர்களின் மனதை சூர்யா புண்படுத்தி விட்டதாக கூறி, நஷ்ட ஈடாக ரூ. 5 கோடியை ஜெய்பீம் தயாரிப்பு நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஜெய்பீம் படத்திற்கு மத்திய மாநில அரசுகள் விருது வழங்கி அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று வன்னியர் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்பட சர்ச்சை தொடர்ந்து, நீடித்து வரும் நிலையில், படத்தின் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குனர் ஞானவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல, இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை.
பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல. இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு திரு. சூர்யா அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது.
இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மன அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, ஜெய் பீம் படம் குறித்தான சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தம்பி ஞானவேல் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
'ஜெய் பீம்' படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம் கண்டேன். தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, இச்சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
(1/3)
— சீமான் (@SeemanOfficial) November 21, 2021
இதுதொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, 'ஜெய் பீம்' படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம் கண்டேன். தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, இச்சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
சமூகப் பதற்றத்தையும், சச்சரவையும் தணிக்கும்விதமாக சமூகப்பொறுப்புணர்வோடும், மிகுந்த முதிர்ச்சியோடும் அணுகிய இம்முறை வரவேற்கத்தக்கது.
ஆகவே, இச்சிக்கலை இத்தோடு கைவிட்டு, இனியும் இப்படத்தின் சிக்கலை ஒட்டுமொத்தச்சமூகத்தின் சிக்கலாக நீடிக்கச்செய்யாது, சமூக அவலங்களுக்காகக் குரலெழுப்பி, மக்களின் துயர்போக்கக் போராடவும், ஆக்கப்பூர்வப்பணிகளில் கவனம் செலுத்தவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.