கோவையில் காளப்பட்டியில் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா (எ) கிருஷ்ணன் வீட்டில் 3 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஈரோட்டில் உள்ள நந்தா கல்வி குழுமத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையின் ஒரு பகுதியாகவே பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. இன்று மூன்றாவது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், பையா கவுண்டருக்கு பிற்பகல் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு பையா கவுண்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட தகவலறிந்த ஏராளமான திமுக தொண்டர்களும் பொது மக்களும் தனியார் மருத்துவமனை முன்பாக கூடினர். இதன் காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை முன்பு குவிந்த கட்சித் தொண்டர்கள்.
அதைத் தொடர்ந்து, சிகிச்சையில் இருந்த பையா (எ) கிருஷ்ணன் படுக்கையில் இருந்து எழுந்து வந்து மக்களை சந்தித்தார். சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் திரும்பி விடுவதாகவும், 3 நாட்களாக தன்னுடன் இருப்பதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறிய அவர், மக்களை கலைந்துசெல்லும்படி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் திமுக கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனிடையே மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டிருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது சோதனையை நிறைவு செய்தனர். வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை மட்டும் அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.