தனது தம்பியுடன் தகாத உறவில் ஈடுபட்ட மனைவியை பலமுறை எச்சரித்தும், கேட்காததால் ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டு, தற்கொலை நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பிராட்வே புத்திசாகிப் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(37). கூலி தொழிலாளியான அப்துல் ரகுமானுக்கு கடந்த 12 வருடத்திற்கு முன்பு யாஸ்மின்(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் நீண்ட நேரமாக யாஸ்மின் உறக்கத்தில் இருந்து எழாததால், சந்தேகமடைந்த அவரது தாயார் பரிதாபானு அருகிலிருந்த மருத்துவரை அழைத்து வந்து பார்த்தபோது யாஸ்மின் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த எஸ்பிளனேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த யாஸ்மினின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also read... இதெல்லாம் மாணவ மாணவிகளிடம் கேட்கமுடியுமா? பள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் குமுறல்
மேலும், குடும்ப தகராறில் யாஸ்மின் தூக்க மாத்திரை அதிகமாக சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாக யாஸ்மினின் கணவர் அப்துல் ரகுமான் போலீசாரிடம் தெரிவித்த நிலையில், போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனால், இவ்வழக்கில் திடீர் திருப்பமாக யாஸ்மின் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே இறந்திருப்பதாக மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
அதனடிப்படையில் யாஸ்மினின் கணவரான அப்துல் ரகுமானைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் யாஸ்மின் அப்துல் ரகுமானின் தம்பியுடன் பல மாதங்களாக தகாத உறவில் இருந்து வந்ததாகவும், அந்த தொடர்பை துண்டிக்குமாறு அப்துல் ரகுமான் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் இரு வீட்டார் முன்னிலையில் சமாதானம் பேசி முடித்ததாகவும், ஆனால் தொடர்ந்து யாஸ்மின் அவரது தம்பியுடன் தொடர்பில் இருந்து வந்ததால் ஆத்திரத்தில் உறங்கச் சென்றபின் யாஸ்மினின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் அப்துல் ரகுமானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.