எங்களை மோசமானவர்கள் என
பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறினால் அது உண்மைதான் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ்நாடு தலைவர் முகமது ஷேக் அன்சாரி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். இவர்கள் மாணவர்களை போலவும், மனித உரிமை இயக்கம் போலவும், அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்து கொண்டு நம் நாட்டில் இயங்கி வருகின்றனர். மேலும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக செயல்பட்டு வருகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், ஆளுநரின் கருத்து தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ்நாடு தலைவர் முகமது ஷேக் அன்சாரி கூறும்போது, இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து போராடும் ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. யார் என்ன சொன்னாலும் மக்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். இந்த ஆட்சியில் நல்லவர்களை கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாகவும் சித்தரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
கொரோனா காலத்தில் இறந்த உடல்களை யாருமே தொடுவதற்கு முன்வராத சூழலில் முதல்முதலாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்கள் அனைத்து மத உடல்களையும் அவர்களின் இறுதி சடங்கு நடைமுறைப்படி முன்னெடுத்து பணிகளை ஆற்றினர்.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் இதுபோன்று கருத்து தெரிவித்திருப்பது ஆர்எஸ்எஸின் குரலாக அவர் பேசியதை போல்தான் இருந்தது. ஆர்எஸ்எஸ், பாஜகவும் வன்முறைக்கும் எத்தனை சம்பந்தம் உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குறித்து தீவிரவாத அமைப்பாக சித்தரிக்க என்ன ஆதாரம் உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
சிஏஏ, ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தூண்டுதலின் பெயரில் போராட்டங்கள் நடைபெற்றதாக சித்தரிக்க நினைக்கிறார்கள். அப்படி சித்தரிக்க நினைப்பது தவறில்லை மக்கள் பிரச்சனைக்காக முன்னின்று போராடவில்லை என்றால் தான் தவறு.
அந்தவகையில், எங்களை மோசமானவர்கள் என பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறினால் அது உண்மைதான். அவர்கள் செய்யும் தவறான செயல்களுக்கு நாங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதால் அவர்கள் அப்படி கூறுவார்கள் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.