ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் பழ நெடுமாறன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் மேடையில் பேசிய சிவாஜிலிங்கம், காவிரிக்காக தமிழக மக்கள் குரல் கொடுப்பதை போன்று ஈழத்தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்திய மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய கவிஞர் காசி ஆனந்தன், சிங்களர்கள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டம் ஆட்சியாளர்களை மாற்றுவது தொடர்பானது என்றும் தமிழர்கள் நடத்தி வரும் போராட்டம் இலங்கையின் அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பானது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மக்களுக்கு நன்மை தராத திட்டங்களை மறு ஆய்வு செய்யலாம்: அரசுக்கு யோசனை வழங்கிய உயர்நீதிமன்றம்
பின்னர் பேசிய அண்ணாமலை, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டாலும் அதை சுற்றி மீன்பிடிப்பதற்கான உரிமையை வழக்கும் சட்டப்பிரிவு 6-ஐ முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை காலகட்டத்தில் யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக ரத்து செய்துவிட்டதாக சாடினார். கச்சத்தீவு யாரிடம் உள்ளது என்பது முக்கியமில்லை என்றும் கச்சத்தீவு சுற்றியுள்ள பகுதிகளில் தமிழர்கள் மீன் பிடிப்பதற்கு ஏதுவாக சட்டப்பிரிவு 6-ஐ அரசியலமைப்பில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், தனி ஈழம் உருவாக்கப்பட்டால் உலகத்தில் சிறிய நாடாக அது தான் இருக்கும் என்று கூறிய அண்ணாமலை, இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கிற ஒரே மனிதர் நரேந்திர மோடி தான் என்றும் திட்டவட்டமாகக் தெரிவித்தார்.
மேலும் படிக்க: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு.. 3 மாத காலத்திற்குள் இலவச மிதிவண்டிகள்..
இந்நிகழ்ச்சியில் பேசிய பழ நெடுமாறன், ராஜபக்சேக்கள் சொந்த நாட்டிலேயே ஓடி ஒளிந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார். இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியிருப்பது இந்தியாவிற்கு ஆபத்து என்று கூறிய பழ நெடுமாறன், பிரதமர் நரேந்திர மோடி ராஜதந்திரம் மிக்க தலைவராக உள்ளதாகவும் பாராட்டி பேசினார்.
முன்னதாக பேசிய திருச்சி வேலுச்சாமி, இலங்கை பிரச்னையில் அனைவரும் சேர்ந்து போராடுவதே சரியான தீர்வாக இருக்கும் என்றார். ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக வேண்டும் என்பது அனைவரின் நோக்கம் என்று பாமக வழக்கறிஞர் பாலு கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Narendra Modi, Srilankan tamil war