மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான ஐயப்பன். கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அவரும், அகிலாவும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்
குடிப்பழக்கம் கொண்ட ஐயப்பனுக்கு தனது இரு குழந்தைகளும் சிகப்பாக பிறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். ஒரே தெருவில்தான் தாய் வீடு என்பதால் அகிலாவும் அங்கு சென்று விடுவார்; அவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி விடுவார்கள்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை, வீட்டில் அகிலா மயக்கமடைந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதறியடித்து ஓடி வந்த அவர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
பரிசோதித்த மருத்துவர்கள் அகிலா இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அகிலாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குத்தாலம் போலீசாரிடம் புகாரளித்தனர்.
ஐயப்பனைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர், குடிபோதையில் கயிற்றால் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
குழந்தைகள் சிகப்பாக பிறந்ததால் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குழந்தையின் நிறம், குணம், பழக்கவழக்கம் என்பது தந்தை, தாய் மட்டுமின்றி, அவர்களது முன்னோர்களின் மரபணுக்களாலும் நிர்ணயிக்கப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். சந்தேகப்புத்தியால், காதல் மனைவியை கணவனே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம், அசிக்காடு கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.