திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர். இவர் போச்சம்பள்ளி பகுதியில் செயல்பட்டுவரும் தொழில்பேட்டையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த வருடம் திருப்பத்தூர் அடுத்த பஞ்சணம் பட்டிபகுதியை சேர்ந்த இவரது தாய் மாமன் கிருஷ்ணனுடைய மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
மேலும் ஆர்த்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
பின்னர் குடும்பத்தில் அனைவரும் தூங்கிய நிலையில் யாருக்கும் தெரியாமல் ஆர்த்தி விடியற் காலை 5 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள பால சோமேஸ்வரர் என்பவரின் சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் கிணற்றின் வழியாகச் சென்ற அக்கம்பக்கத்தினர் கிணற்றை பார்த்தபோது ஆர்த்தியின் உடல் இருப்பதைக்கண்டு அவருடைய கணவரான சுதாகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பதறிப்போன சுதாகர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த ஆர்த்தியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மனைவி இறந்த அடுத்த ஒருமணி நேரத்தில் சுதாகர் யாருக்கும் தெரியாமல் அருகே உள்ள தேக்கு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Also read... போலீஸ் ஜீப் மோதி தாய் - மகள் படுகாயம்.. திசை திருப்ப முயலும் போலீசார்?
இதுகுறித்து கந்திலி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுதாகர் மற்றும் ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து தனித்தனியாக தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
-செய்தியாளர்: வெங்கடேசன். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.