பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழணங்கு பதிவில் தமிழ் எழுத்துக்களுடன் ஸ என்ற எழுத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்திருந்த நிலையில்,
ஸ்டாலின் என்ற பெயரை எப்படி அழைக்க வேண்டும் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக ஊடக பக்கத்தில், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்திருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழணங்கு ஓவியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து, எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என பதிவிட்டிருந்தார்.
இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தனது ட்விட்டர் பதிவில், எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்று பதிவிட்டிருந்தார். இதில், வேறு தமிழன்னை ஓவியத்தை அவர் பகிர்ந்திருந்தார். இதையடுத்து எது உண்மையான தமிழன்னை என திமுக - பாஜக ஆதரவாளர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட தொடங்கினார்.
இந்நிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்” என அண்ணாமலை பகிர்ந்த ஓவியத்தை பகிர்ந்து விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை, தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். "தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!
இதையும் படிக்க: எது ஒரிஜினல் தமிழணங்கு? இணையத்தில் மோதிக்கொள்ளும் திமுக - பாஜக!
ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.