விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய மருத்துவர்கள், மற்றும் ரத்த வங்கி பணியாளர்கள் மீது சாத்தூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அடுத்தகட்ட சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி, சிவகாசி அரசு இரத்த வங்கியில் 21 வயது இளைஞர் ரத்ததானம் செய்துள்ளார். அடுத்த சில நாட்களில், அந்த இளைஞரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் முறையான சோதனைக்குப் பிறகு பாதுகாப்பு அறைக்கு அனுப்பப்பட்டது.
டிசம்பர் 3-ம் தேதி சாத்தூரைச் சேர்ந்த ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட, 8 மாத கர்ப்பிணிக்கு இளைஞரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது. ரத்தம் செலுத்தப்பட்ட பிறகு, கர்ப்பிணிக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 17-ம் தேதி, சாத்தூர் சுகாதார மையத்தில் இரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டதில் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, டிசம்பர் 24-ம் தேதி இணை இயக்குநர் தலைமையிலான குழுவால் நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில், கர்ப்பிணி எய்ட்ஸால் பாதிக்கப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 18-ம் தேதியிலிருந்து எச்.ஐ.வி நோய்க்கான கூட்டு மருந்து சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. ஆசை ஆசையாக படித்து, ஆசைப்பட்டவரை சாதி மறுப்பு திருமணம் செய்த பட்டதாரி இளம்பெண், சில வாரங்களில் மகனோ, மகளோ வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் அரசு பணியாளர்களின் அலட்சியம் இப்பெண்ணின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது.
சம்பவம் நடந்த போது, சிவகாசி ரத்த வங்கியில் லேப் டெக்னீசியன்களாக வளர்மதி மற்றும் கணேஷ் பாபு ஆகியோர் பணியாற்றினர். ஆலோசகராக ரமேஷ் என்பவர் பணியாற்றினார். முதல்கட்ட விசாரணையில், ரத்தம் எடுக்க வந்த இளைஞருக்கு முறையான கவுன்சிலிங் தரப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், இளைஞரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை முறையாக பரிசோதனை செய்யவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி. ரத்தம் எப்படி வந்தது?
இளைஞரின் ரத்த மாதிரியில் காம்பவுண்டிங் என்று சொல்லப்படும் சந்தேகத்திற்குரிய வகையில் சில தொற்றுகள் இருந்துள்ளன. ஆனால், அந்த ரத்த பாக்கெட்டை தனிமைப்படுத்தி, மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தாமல், எப்படி அனுமதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் வெளிநாட்டில் கிடைத்த வேலையில் சேர, தனியார் மருத்துவ பரிசோதனைக் கூடத்தில் இரத்தம் கொடுத்த இளைஞர் ரத்த மாதிரிகளை சோதனைக்கு கொடுத்துள்ளார். அந்த சோதனையில், எச்.ஐ.வி தொற்று தனக்கு இருப்பதை அந்த இளைஞர் உறுதி செய்து கொண்டார். உடனடியாக, ரத்த தானம் கொடுத்த மையத்திற்கு வந்த அந்த இளைஞர், அங்கிருந்த பணியாளர்களிடம் தனக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் என்பதைக் கூறியுள்ளார்.
ஆனால், ரத்ததான மையத்தில் இருந்தவர்கள் அதைக் கையாண்ட விதம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வழக்கமாக, சந்தேகத்திற்குரிய ரத்த மாதிரியை தனிமைப்படுத்தி, அதில், சிவப்பு நிறத்தில் பெருக்கல் குறி போடப்பட வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. ரத்தம் கொடுத்தவரே நேரில் வந்து சொன்ன பிறகும், அங்கிருந்த பணியாளார்கள் மிக அலட்சியமாக செயல்பட்டனர் என்கிறது விசாரணைக் குழு.
அதேபோல், எலைசா சோதனையில், இளைஞர் ரத்தத்தில் எச்.ஐ.வி கிருமி இருந்ததை ஏன் கண்டறிய முடியவில்லை என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. NACO நேக்கோ வழிகாட்டுதல்படி, ஒருவரது ரத்தத்தில் எச்.ஐ.வி இருந்தால், அவரை உடனடியாக அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திற்கு அனுப்ப வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
சிவகாசி ரத்த வங்கியில் உள்ள உபகரணங்கள், சோதனை கிட்கள் எதுவும் நவீனமானவை இல்லை என்றும், அதனால்தான் சோதனையில் தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தினமும் சுமார் 2 லட்சம் யூனிட்கள் ரத்தம் தானமாக பெறப்படுகிறது. இதுவரைக்கும் எந்த தவறும் நடந்ததில்லை.. ஆனால் முதன்முறையாக நடந்துள்ள இந்த தவறை நியாயப்படுத்த முடியாது என்கிறார்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள்.
3 பேர் பணி நீக்கம்
சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறாக, எச்.ஐ.வி கிருமி தொற்று கொண்ட ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு, சிவகாசியில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. தவறு செய்த சிவகாசி ரத்த வங்கி லேப் டெக்னீசியன்கள் வளர்மதி மற்றும் கணேஷ் பாபு, ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் குடும்பத்தினர், மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய மருத்துவர்கள், மற்றும் ரத்த வங்கி பணியாளர்கள் மீது சாத்தூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளார். அடுத்தகட்ட சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறு பரிசோதனை
இந்நிலையில், இன்று அவருக்கு மறுபரிசோதனை செய்ய டீன் சண்முகசுந்தரம் தலைமையில் சிறப்பு குழு முடிவு செய்துள்ளது. எச்ஐவியின் தாக்கம் குறித்த இந்த பரிசோதனைக்கு பிறகு அவருக்கு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும் என்றும் டீன் தகவல் அளித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுத்தாலும், நஷ்ட ஈடாக எவ்வளவு பெரிய தொகை கொடுத்தாலும், எய்ட்ஸ் நோய் பாதிப்பை நீக்க முடியாது. அந்தக் கொடூரத்தைத் தணிக்கவும் செய்ய முடியாது.
Also see... பாஜக - அதிமுக கூட்டணி முடிவாகிவிட்டதா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: HIV Blood, Sattur, Virudhunagar