திருப்பூரில் சுயவிளம்பரத்திற்காக தனக்கு தானே காயம் ஏற்படுத்திக்கொண்டு தாக்குதல் நாடகமாடிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரகாட்டக்காரன் படத்தில் நடிகர் செந்திலின் சுயவிளம்பரம் குறித்த காமெடியை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சுயவிளம்பரத்திற்காக தனது சொந்த இருசக்கர வாகனத்தையே அண்மையில் கொளுத்திய நிலையில், திருப்பூரில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் தனக்குத்தானே ரத்த காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த பகவான் நந்து என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்திவருகிறார். இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக உள்ள இவர், அடையாளம் தெரியாத சிலர், நேற்று முன்தினம் தன்னை அரிவாளால் வெட்டியதாகக் கூறி போலீசில் புகார் அளித்தார்.
ரத்தம் சொட்டச் சொட்ட, கை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயத்துடன் காணப்பட்ட பகவான் நந்துவிற்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் 7 தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்தனர். பகவான் நந்துவின் வாகன ஓட்டுநர் ருத்ரமூர்த்தி என்பவர், திருப்பூர் வடக்கு வட்டாட்சியரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசியல் ஆதாயம் தேட முயன்ற பகவான் நந்துவின் கட்டளைக்கு அடிபணிந்து தானே அவரை கத்தியால் குத்தியதாகவும், பின்னர் பகவான் நந்து தனக்குத்தானே இரு கைகளிலும் காயம் ஏற்படுத்திக் கொண்டதாகவும் ருத்ரமூர்த்தி கூறியுள்ளார்.
இதையடுத்து, பகவான் நந்து மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.