முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை: நீதிமன்றம் உத்தரவு!

பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை: நீதிமன்றம் உத்தரவு!

பள்ளிப் பைகளில் தலைவர்கள் படத்துக்கு தடை

பள்ளிப் பைகளில் தலைவர்கள் படத்துக்கு தடை

பள்ளி மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால் புத்தக பைகள், புத்தகங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள் அடங்கிய பைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை அச்சிட்டு அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களை நீக்காமல் மாணவர்களுக்கு விநியோகம் செய்ய உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீதிமன்றம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருப்பில் உள்ள, முன்னாள் முதலைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அச்சிடப்பட்ட நோட்டு புத்தகங்கள், புத்தக பைகளை கைவிடும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி,  நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருதார்.

அந்த மனுவில், தற்போது இருப்பில் உள்ள நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களின்  புகைப்படங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வழங்கலாம் எனவும்,  அதை விடுத்து, இருப்பில் உள்ள  நோட்டுகள், பைகளை வினியோகிக்காமல் தவிர்ப்பதன் மூலம் பொது மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கப்படுவதாகவும், மாறாக அவற்றை மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்க உத்தரவிட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சி தலைவர்களை படங்களை அச்சிட தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர்,  முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தக பைகள், 10 லட்சம் எழுதுபொருட்கள் வீணாக்கப்பட மாட்டாது எனவும், அவை மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு  விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பிய பாஜகவினர்!

மேலும், பள்ளி புத்தக பைகளில் படத்தை அச்சிடுவதை முதலமைச்சர் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை கேட்ட தலைமை நீதிபதி, தமிழக முதல்வரின் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால் புத்தக பைகள், புத்தகங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க: விரைவில் டிஎன்பிஎஸ்சி தேர்வு? அரசுப் பணிகளில் காலி இடங்களை நிரப்ப முதலமைச்சர் உறுதி

அரசு நிதியானது இது போன்ற  விளம்பரத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பள்ளி புத்தக பைகளில் அரசியல் தலைவர்களின் படங்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Chennai High court, School Bag, Tamilnadu government