அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்சம் மோசடி செய்ததாக கைதான முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளராக பணியாற்றிய மணி என்பவரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்த மணி என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதற்காக கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் 17 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் உதவியாளராக சில ஆண்டுகளாக மணி இருந்து வந்ததை நம்பி பணம் கொடுக்கப்பட்ட நிலையில், வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தை மோசடி செய்துவிட்டதாக சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையிடம் தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார். மேலும் மணிக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார்.
தமிழ்ச்செல்வன் தவிர்த்து மேலும் சிலரும் உதவியாளர் மணி மீது போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். இதுதொடர்பாக மணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து,
தலைமறைவாக இருந்த மணியை சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மணி ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுவில், தன் மீதான புகார் பொய் புகார் என்றும், தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், தனக்கு நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
Also read... ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.