தமிழகத்தில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்களை வெளிமாநிலங்களில் தற்காலிக முன்பதிவு செய்வதன்மூலம், 52 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதை போக்குவரத்து துறை கண்டறிந்துள்ளது. இதனை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் எண்ணூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு கரூர், நாமக்கல், பூந்தமல்லி, திருச்செங்கோடு, சேலம், சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் பாடி கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.
தற்காலிக பதிவுச் சான்று பெற்ற ஒரு மாத காலத்துக்குள், சாலைப் போக்குவரத்து அலுவலகங்களில் நிரந்தர வாகனப் பதிவு செய்யப்பட வேண்டும். இதில், பாடி கட்டுவதற்கு முன்னதாக, தற்காலிக பதிவுச் சான்றுகளைப் பெற வேண்டும்.
அதற்கு மோட்டார் வாகனச் சட்டப்படி, வாகனத்தின் விலையில் 15 சதவீதம் அளவுக்கு ஆயுட்கால வரி கணக்கிட்டு, அதில் 2 சதவீதத்தை தற்காலிக வரியாகவும், பதிவுக்கட்டணமாக 40 ரூபாயும், சேவைக்கட்டணமாக 100 ரூபாயும் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் தற்காலிக பதிவுக்கு 39 லட்சம் ரூபாய் மொத்த விலை கொண்ட வாகனத்துக்கு 11,840 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் 500 ரூபாய்க்கு தற்காலிக பதிவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
எனவே, தமிழகத்தில் தயாரிக்கப்படும் வாகனங்களை கர்நாடகாவுக்கு எடுத்துச் சென்று அங்கு வாகனம் வாங்கியதுபோன்று, தற்காலிக பதிவுச் சான்று பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
பூந்தமல்லி கிடங்கில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்திலிருந்து வேலூரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளருக்கு கடந்த ஜனவரி மாதத்தில் கனரக வாகனத்திற்கான விலைப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் துணைப் போக்குவரத்து ஆணையர் ஆய்வுசெய்தபோது, அந்த வாகனம் கர்நாடக மாநிலத்தின் சந்தபுரா வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக பதிவு செய்தது கண்டறியப்பட்டது.
இதேபோல, 50 ஆயிரம் வாகனங்கள் தமிழகத்தில் பதிவுசெய்யாமல் அண்டை மாநிலங்களில் பதிவுசெய்வது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், போக்குவரத்து துறைக்கு 52 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுபோன்று நடைபெறாமல் தடுக்க வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், தவறுகள் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து ஆணையர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முறையாக கண்காணிக்காவிட்டால், அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், அரசு புதிய விதிமுறைகளை தங்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள நாமக்கல் லாரி பாடி கட்டும் சங்கத்தினர், பாடி கட்டும் சங்கத்தில் பதிவுசெய்துவிட்டு பணியை செய்தால், இழப்பைத் தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் போர் - இருநாடுகளும் பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் என்னென்ன?
போக்குவரத்து துறை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதன் மூலமே, அரசுக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vehicle