மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. அதேநேரத்தில் தமிழ் நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் ஒன்பதாம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்துக்கு பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், மின்னல் மற்றும் பணப்பாக்கத்தில் தலா 20 சென்டிமீட்டர் மழை பதிவானது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.