ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமனறத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை 2000-ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பிறகு, கடந்த 10 ஆண்டுகளில் சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.
Also read... இத்தனை நாள் பொறுமையா இருந்தடா கண்ணு... கொஞ்சம் பொறு: அற்புதம்மாள் உருக்கம்!
ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்துள்ள போதிலும், 28 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்படவில்லை என்றும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வழங்கிய பரோல் விண்ணப்பத்தை வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் , நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மகளின் திருமண ஏற்பாடு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை நளினி தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நளினி நேரில் ஆஜராகி வாதிட அரசுக்கு என்ன பிரச்னை உள்ளது என கேள்வி எழுப்பினர். மேலும் நளினியை ஆஜர்படுத்தும் போது, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்தால் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நேரில் ஆஜராகி வாதிட நளினிக்கு உரிமை உள்ளது எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, Nalini, Rajiv death case