அம்மா மினி கிளினிக்-களில் மருந்தாளுனர்கள் நியமிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு விரைந்து மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 2,000 மினி கிளினிக்-கள் தொடங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, தற்போது அம்மா கிளினிக்-கள் பகுதி வாரியாக தொடங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருந்தாளுநர்களை நியமிக்காமல், அம்மா மினி கிளினிக்-களை திறக்க தடை விதிக்க கோரி, சென்னையை சேர்ந்த வசந்த் குமார், கார்த்திக் என்ற இரு மருந்தாளுனர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், 1948 பார்மஸி சட்டப்படி மருத்துவர் பரிந்துரை அடிப்படையில் மருந்தாளுனர்கள் மட்டுமே மருந்துகளை விநியோகிக்க தகுதி பெற்றவர்கள் எனவும், ஆனால் தமிழக அரசு அமைத்துள்ள மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கானோர் மருந்தாளுனர்களுக்கான படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில்,செவிலியரை வைத்து மருந்து விநியோகிப்பது சட்டப்படி தவறு என்பதால், 2,000 மினி கிளினிக்களிலும் மருந்தாளுனர் பணியிடத்தை உருவாக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.
Also read... 1901-க்கு பிறகு எட்டாவது மிக வெப்பமான ஆண்டு 2020 - IMD அறிவிப்பு!
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான் அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பார்மஸி சட்டப்படி மருத்துவர்களோ, மருந்தாளுனர்களோ மருத்து வழங்க விதி உள்ளதாகவும், மினி கிளினிக்-களில் மருத்துவர்களே நேரடியாக மருத்து வழங்குவார்கள் எனவும் விளக்கினார்.
இடத்தின் பரப்பளவு குறைவு என்பதால் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதன் காரணமாக பணியிடங்களை அதிகரிக்க முடியாது எனவும் தெரிவித்தார். அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.