தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ள நிலக்கரி டெண்டர் ஊழலை தடுக்க கூட்டு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மின்சார வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழகத்தில் மின் வாரியத்திற்கு சுமார் 1330 கோடி மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய அறிவிக்கப்பட்ட டெண்டரில் பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சில குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக இந்த டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டெண்டர் விதிகளின்படி, நிலக்கரி இறக்குமதி டெண்டர் குறித்து, இந்திய வர்த்தக இதழில் தகவல் வெளியிட வேண்டும். ஆனால், அந்த இதழுக்கு நிலக்கரி டெண்டர் குறித்த அறிவிப்பு வெளியிட வில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளார்.
Also read... கிருஷ்ணகிரியில் கனிம வளங்களை எடுப்பதற்கான புதிய டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை...!
மேலும், இந்திய கணக்கு தணிக்கை துறையின் அறிக்கையில், கடந்த முறை நடந்த நிலக்கரி ஊழல் குறித்து சுட்டிக்காட்டிய மனுதாரர், தமிழகத்தில் இறக்குமதி செய்யவுள்ள நிலக்கரியில், ஊழலை தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய கூட்டு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியவற்றிற்கு உத்தரவிட்டனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.